காமன்வெல்த் மாநாடுக்கு எதிர்ப்பு: சமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் இன்னும் சில தினங்களில் காமன்வெல்த் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதையும் மீறி பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரில் சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கருநாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் சுந்தரேசன், மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன், பிரசாத், சரவணன், பாபு, பாஸ்கரன், மரிய மாணிக்கம், சந்திரபோஸ், முருகேசன், இளைஞர் அணி மகாலிங்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப்பதை எதிர்த்து முழக்கமிடப்பட்டது. திருநெல்வேலியில் சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலும் திருச்சியில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலும் திருப்பூரில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது