சேலத்தில் களமிறங்கப் போவது யார்? பாமக அருளா? தேமுதிக சுதீஷா?
சேலம்: பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேமுதிக இடையே சேலம் தொகுதியை கைப்பற்றுவதில்தான் போட்டா போட்டி நிலவி வருகிறது.
அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் சில மாதம் இருக்கும் நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும், தொகுதிப் பங்கீடும் உச்சக்கட்ட சூட்டினை கிளப்பி வருகிறது. முக்கியமாக சேலம் தொகுதிக்குத்தான் பாஜக கூட்டணியில் மல்லுக்கட்டு அதிகம் என்கின்றனர்.
பாமகவைச் சேர்ந்த அருள் கடந்த 4 மாதகாலமாகவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டாராம். ஆனால் தேமுதிக செய்த சர்வேயில் சுதீஷ் நின்றால் வெற்றி நிச்சயம் என்று தெரியவரவே மல்லுக்கட்டு தொடங்கியிருக்கிறது.
சேலம் தொகுதியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறி ஒரு தொண்டர் தீக்குளிக்கவே, பதற்றம் பற்றிக்கொண்டது. சேலம் தொகுதி கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டால், தனித்து களமிறங்குவோம் என்று கூறி முழக்கமிட்டுள்ளனர்.
பொங்கிய ராமதாஸ்
சேலம் பொதுக்கூட்டத்தில் சுதீஷ்தான் வேட்பாளர் என்று விஜயகாந்த் அறிவிக்கப் போவதாக தர்மபுரியில் முகாமிட்டிருந்த ராமதாசுக்கு தகவல் தெரியவரவே, மேடையில் ஏறிய ராமதாஸ், கடகடவென வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க ஆரம்பித்து விட்டார்.
சேலத்தில் அருள் போட்டி
கள்ளக்குறிச்சிக்கு ஆத்தூர் சண்முகம், திருவண்ணாமலைக்கு எதிரொலி மணியன், சேலத்திற்கு அருள் என பெயர்களை அறிவிக்கவே, அது சேலத்தில் இருந்த விஜயகாந்திற்கு எட்டியது. ஏனெனில் இந்த மூன்றுமே தேமுதிக குறிவைத்துள்ள தொகுதிகள்
சலனமில்லாத சுதீஷ்
உடனே, பேச்சை மாற்றிய விஜயகாந்த், நரேந்திர மோடி பிரதமராக வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு, பேச்சை முடித்துக் கொண்டார். சுதீஷை வேட்பாளராக அறிவிக்கவில்லை. இது மேடையில் இருந்த சுதீஷை சலனமற்ற நிலைக்கு மாற்றியதாம்.
பம்மிய காரணம்
தர்மபுரியில் ராமதாஸ் பாய்ந்த போது சேலத்தில் விஜயகாந்த் பம்மியதற்கு காரணம் தெரியவில்லை என்கின்றனர் கூட்டணிக் கட்சியினர்.
கட்டாய திருமணம்
ராமதாசை பொருத்தவரை, பாஜக கூட்டணியில் இணைவதை கட்டாய திருமணமாகத்தான் பார்க்கின்றனராம். பாஜக, பெரியண்ணன் தோரணையில் நடந்து கொள்வதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் ராமதாஸ்.
தேமுதிக உடன் கூட்டணி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதற்கே பலன் சரியில்லை. இம்முறை தேமுதிக உடன் இணைவது சரியாக வருமா? என்று ஒரு தரப்பினர் ராமதாசை உசுப்பேற்றி வருவதும் அன்புமணியை கவலையடைச்செய்துள்ளது.
ஓய்வெடுக்கும் மூடில்
ஆனால் அன்புமணி ராமதாசும், ஜி.கே.மணியும் பாஜக கூட்டணியில் தொடர்வதையே விரும்புவதால், ராமதாசை ஓய்வெடுக்கச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எது எப்படியோ? பாஜக கூட்டணி தேரின் வடத்தை பாமக பிடிக்குமா? அல்லது தனியாக களமிறங்குமா என்பது ராமதாசுக்கே வெளிச்சம்.