மாட்டிறைச்சி விருந்து நடத்திய ஐஐடி மாணவர் மீது கொடூரத் தாக்குதல்: ஆளூர் ஷாநவாஸ் கடும் கண்டனம்
சென்னை: சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர் சுராஜ் மீது கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. கேரளா, கர்நாடாக, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய சூரஜ் என்ற மாணவர் மீது சக மாணவர்கள் சிலர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த சூரஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆய்வு மாணவர் சூரஜ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாட்டுக்கறியை காரணம் காட்டி, வட மாநிலங்களில் தாக்குதல்களை நடத்தி வந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல், இப்போது பெரியாரின் தமிழ்நாட்டிலும் அதை விரிவு படுத்தியிருக்கிறார்கள்.
தமிழக அரசே, காவல்துறையே, ஐ.ஐ.டியில் வன்முறையில் ஈடுபட்டுள்ள குண்டர்கள் மீது குண்டர் சட்டத்தை போடு!
இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் பதிவிட்டுள்ளார்.