ஜல்லிக்கட்டு தடை நீடிக்கக் காரணமே, திமுக, அதிமுகதானே.. இப்போது நீலிக்கண்ணீரா?.. விஜயகாந்த் தாக்கு
சென்னை: ஜல்லிக்கட்டு தடை தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமான திமுக, அதிமுக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு தடையை நீக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது
அதிகஅளவு எம்.பிக்களை வைத்திருக்கின்ற அதிமுகவால், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்காக "பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத்தடுத்தல் சட்டத்தில்" திருத்தம்கொண்டுவந்து, அதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை?
தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு, அதற்கு தடை, தடையென சுமார் பத்தாண்டுகளாக நீடிக்கிறது. அதற்கு அதிமுக, திமுக என இரண்டு ஆட்சிகளுமே காரணமாகும். ஆனால் தற்போதுதான் தடை விதித்தது போல நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயாராகிவிட்டார் என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகிறது.
பிரதமர் மோடி ரஷ்யா நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்லும்போதும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டுமென, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது "மக்கள் காதில் பூச்சுற்றவே" எனத்தெரிகிறது. பிரதமர் வெளிநாடு செல்வதும் மற்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைவதும் குறித்து, பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் செய்திககளை வெளியிட்டுள்ள நிலையில், மக்களை ஏமாற்றவே தற்போது பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
நிர்பயா வழக்குக்காக, சிறுவர்கள் குற்ற நீதி சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதேபோல், பிராணி களுக்கு இழைக்கப்படும் தீங் கினைத் தடுத்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு அதிகளவு எம்.பி.க்களை கொண் டுள்ள அதிமுகவால் ஏன் முடிய வில்லை. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
2016ல் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஒரு துரும்பையும் எடுத்துப்போட்டதாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தந்திருக்கவேண்டும். இல்லையென்றால், அதிமுக எம்.பிக்களை கொண்டு மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக் காளையை, பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப்பிரிவு 22-ன் பட்டியலில் இருந்தாவது விடுவித்திருக்கவேண்டும். இது எதையுமே செய்யாத ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது.
55 மாதம் ஆட்சியில் இருந்தும், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு எதையும் செய்யாமல், ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை பார்த்து பயந்துபோய், சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவேண்டும் என்பதற்காக, "தூங்கிக் கொண்டிருந்தவர் விழித்தெழுந்தது போல்" இவர் காலம் கடந்து செய்யும் செயலை, மக்கள் நாடகமாகத்தான் பார்கிறார்கள். இந்த நாடகத்தைக்கண்டு மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வருகின்ற தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்திடவேண்டும் என்பதில் தேமுதிக உறுதியோடு இருக்கிறதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.