எம்.ஜி.ஆருக்கு நெடுஞ்செழியன், வீரப்பன் என பட்டாளமே இருந்தனர்... ஜெ.வுக்கு?
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவை வழிநடத்தும் 2-ம் கட்ட தலைவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி விவாதப் பொருளாகி வருகிறது. இதுவே அதிமுகவை சிதைக்க நினைக்கும் சில கட்சிகளுக்கு பலமாகவும் ஆகி வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கி இருக்க வேண்டும் என்பது அப்பல்லோ மருத்துவர்களின் அறிவுறுத்தல்.
இதனால் அரசை நிர்வகிக்க ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அவர்தான் அமைச்சரவை கூட்டங்களுக்கும் தலைமை வகிப்பார்.. இதனால் அரசாங்கத்தை யார் வழிநடத்துவது என்ற சர்ச்சை ஓய்ந்திருக்கிறது.

கட்சியை வழிநடத்துவது யார்?
அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலர் மட்டுமல்ல... அந்த பேரியக்கத்தை தாங்கி நிற்பவரும் அவரே... தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்களை வழிநடத்தக் கூடியவர் யார்? என்பதுதான் பொதுவான கேள்வி.

ஜாம்பவான்களும் ஜெயலலிதாவும்
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் என பல மூத்த அமைச்சர்கள் 2-ம் கட்ட தலைவர்களாக இருந்தனர்... எல்லோருமே ஜாம்பவான்கள். அவர்களுடன் சரிக்கு சமமாக ஏன் அவர்களுக்குப் போட்டியாகவே ஒற்றை மனுஷியாக ஜெயலலிதாவும் களத்தில் இருந்தார்...

எம்.ஜி.ஆர் தலைமை
இப்படி எதிரும் புதிருமாக அன்றைய அதிமுகவின் தலைவர்கள் அணிகளாக பிரிந்து நின்ற போதும் கூட அனைவரும் எம்.ஜி.ஆர். என்ற தலைமையின் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்பட்டிருந்தனர்... அதனால் ஆட்சி, கட்சி மீது எந்த ஒரு கேள்வியும் எழவில்லை.

1991-க்குப் பின்...
அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது ஜெயலலிதா தலைமையிலான அணியில் கூட திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் என வலுவான 2-ம் கட்ட தலைவர்கள் இருந்தனர்... அதிமுக ஒன்றுபட்டு 1991-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்றார். அதன் பின்னர் ஒரு கட்சி நிலைத்திருக்க கட்டாயம் இருக்க வேண்டிய 2-ம் கட்ட தலைவர்கள் யாருமே இல்லாமல் போனது அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டது என்பது அதிமுகவுக்கு நேர்ந்த துயரம்தான்.

அதிகார மையங்கள்
கால் நூற்றாண்டு காலமாக ஜெயலலிதா என்ற பெரும் சக்தியை மட்டுமே நம்பித்தான் அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த 25 ஆண்டுகாலமும் 2-ம் கட்ட தலைவர்களுக்கு பதிலாக அதிமுகவுக்காக உழைக்காதவர்கள் ஏகப்பட்ட அதிகார மையங்களாக ஆட்சி செலுத்தி வருகின்றனர்.

ஜெ. சொன்னது...
இதை பகிரங்கமாக சொன்னதும் வேறு யாரும் அல்ல.... சாட்சாத் முதல்வர் ஜெயலலிதாதான். 1996, 2011-களில் இந்த அதிகார மையங்களை ஓரம்கட்ட துணிந்தார் ஜெயலலிதா. ஆனால் அது நிலைக்காமல் போனது..

சிதைக்க முயற்சி
தற்போது 2-ம் கட்ட தலைவர்களின் தேவை அதிமுகவுக்கு அவசியப்படுகிறது... ஏனென்றால் அதிமுகவை எப்படியாவது சிதைக்கவே சில கட்சிகள் முனையும். என்னதான் சசிகலாவின் கணவர் நடராஜன் வியூகம் வகுத்து கொடுத்தாலும் 'சிதைப்பதில்' கை தேர்ந்தவர்கள் முன் அது எடுபடாது..

பலமும் பலவீனமும்
கட்சி மீது கை வைக்க முடியாத அளவுக்கு பலமான அரணாக 2-ம் கட்ட தலைவர்கள் இல்லாமல் இருப்பதே அதிமுகவுக்கு பலவீனம்... அதுவே அந்த கட்சியை சிதைக்க நினைக்கும் சக்திகளுக்கு பலம்... இந்தப் பலத்தை தெரிந்தோ தெரியாமலோ கொடுத்து விட்டவர் சாட்சாத் ஜெயலலிதாதான்.

உடனே சிதைக்காது... ஆனால்
தற்போது அதிமுக மீது எந்த ஒரு கட்சியுமே உடனே கை வைத்துவிட முடியாது.... ஆனால் ஜெயலலிதா குணமடையும் காலம் 'எவ்வளவு' என்பதை தீவிரமாக அந்த சக்திகள் கண்காணிக்கும்...கையில் அதிமுகவை அசைப்பதற்கான 'அஸ்திவார' கல்லோடு!!












Click it and Unblock the Notifications