சென்னை வந்த அமீத் ஷா.. கண் ஆபரேஷன் செய்த சகோதரியைப் பார்க்க!
சென்னை: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். ஆனால் அவர் சொந்தப் பயணமாக வந்துள்ளதால், பாஜகவினர் யாரும் அவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமித்ஷாவின் சகோதரி ஆர்.பி.ஷா கண்வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று காலை ஆர்.பி.ஷாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை வருகை
தனது சகோதரியை பார்ப்பதற்காக அமித்ஷா, நேற்றிரவு 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்திருந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலில் சென்று தங்கிய அவர் இன்று காலை 10 மணிக்கு சங்கரா நேத்ராலயா மருத்துவமனைக்கு சகோதரியை பார்க்கச் சென்றார். அவரை மருத்துவமனையின் சேர்மன் பத்ரிநாத் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
மருத்துவமனையில் அமித்ஷா
அமித்ஷாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்பட வில்லை. அமித்ஷாவின் வருகையையொட்டி சங்கரா நேத்ராலயா மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சகோதரியின் ஆபரேசன்
சகோதரி ஆர்.பி. ஷாவுக்கு நடைபெற்ற கண் ஆபரேஷனை அமித்ஷா அருகில் இருந்து கவனித்தார். கண் ஆபரேஷன் முடிந்து சாதாரண வார்டுக்கு ஆர்.பி.ஷா திரும்பினார். இதனால் இன்று மாலையே அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் செல்வதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications