அம்மா கால்சென்டருக்கு முதல் நாளில் 2 ஆயிரம் பேர் அழைப்பு.. குறைகளை குமுறினர்
சென்னை: பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்காக 'அம்மா அழைப்பு மையம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த மையத்திற்கு 1100 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் தெரிவிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 15 ஆயிரம் குறைகளை கேட்க முடியும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகளை கேட்டு அறிவதற்காக 138 அழைப்பு ஏற்பாளர்கள் இந்த மையத்தில் இருப்பார்கள்.

இ-மெயில், எஸ்எம்எஸ்
பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி வழியாக தெரிவிக்கப்பட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார் நிலவரம்
புகார் தெரிவிக்கும் பொது மக்களின் பெயர் விவரங்கள், குறைகள் பற்றிய தகவல் ஆகியவையும் கணினியில் பதிவு செய்யப்பட்டு புகார் தெரிவித்தவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல்கள் அனுப்பப்படும்.

2 ஆயிரம் போன்கள்
முதல் நாளான நேற்றே அழைப்பு மையத்திற்கு பலர் போன் செய்து தங்களது குறைகளை தெரிவித்தனர். ஒரே நாளில் 2 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாவட்டங்கள் அதிகம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான போன் அழைப்புகள் வந்திருந்தன.

வெள்ள நிவாரணம்
தமிழக அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பலருக்கு வெள்ள நிவாரணம் கிடைக்காமலேயே உள்ளது. இதுதொடர்பாக பலர் போன் செய்து விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினர். இதுபற்றிய தங்களது குறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications