‘அம்மா’ காட்டன் மற்றும் ‘ஜெயா’ காட்டன்.. விற்பனைக்கு வரும் 2 புதிய ரக புடவைகள்!!
அரியலூர்: தமிழகத்தில் அழகிய வேலைப்பாடுகளில் தயாரிக்கப்படும் புடவைகள் 'அம்மா' காட்டன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அம்மா உணவகம் தொடங்கி, காய்கறிக்கடைகள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் என மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்திற்கும் அம்மா பெயர் சூட்டப்பட்டுள்ளது. .
இப்போது புடவையிலும் ‘அம்மா'வை புகுத்தியுள்ளார் கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா.
ஆய்வு செய்த கோகுல இந்திரா
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் செங்குந்தபுரம் மற்றும் வாரியங்காவலில் அமைந்துள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டு சேலைகள் மற்றும் வேட்டி ரகங்களின் தரம் குறித்து தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்
அமைச்சர் கோகுல இந்திரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நவீன தொழில் நுட்ப பயிற்சி
அப்போது, ''இந்த பகுதி நெசவாளர்களின் கோரிக்கையையடுத்து இப்பகுதிகளில் உள்ள 28 கைத்தறி நெசவு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் பயிற்சி அளிக்க ஜெயங்கொண்டத்தில் பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றார்.
ஜெயா காட்டன் புடவை
இப்பயிற்சிக்கூடம், கும்பகோணத்தில் உள்ள பயிற்சிக் கூடத்தின் ஒரு பகுதியாக இங்கேயே செயல்படும் என்று கூறிய அவர், ஜெயங்கொண்டம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் புடவைகள் 'ஜெயா' காட்டன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.
அம்மா காட்டன் புடவை
தமிழகத்தில் அழகிய வேலைப்பாடுகளில் தயாரிக்கப்படும் புடவைகள் 'அம்மா' காட்டன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்று கூறினார். ஆனால் விலை மலிவாக இருக்குமா என்பது பற்றி எதுவும் அவர் கூறவில்லை.
கோ ஆப்டெக்ஸ் கொள்முதல்
நெசவாளர்களுக்கு ஓய்வூதியம், நிவாரண நிதி, நகராட்சியில் உள்ள நெசவாளர்களுக்கு தமிழக அரசின் பசுமை வீடு வழங்கும் திட்டம், கூலி ஆகியவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கைதங்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யக்கூடிய சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் கோகுல இந்திரா தெரிவித்தார்.
என்ன கமெண்ட் வருமோ?
அம்மா மருந்தகம் திறந்த போதே அடுத்து இனி அம்மா வெற்றிலை பாக்குக் கடை என்று கிண்டலடித்தார் திமுக தலைவர் கருணாநிதி. இனி இதுக்கு என்ன சொல்வாரோ? தெரியலையே.