சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து அமமுக சார்பில் கண்டனப் போராட்டம்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைக் கண்டித்து அமமுக சார்பில் கண்டனப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜூலை 6 மற்றும் 9ம் தேதிகளில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனால், இதனை விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். சில இடங்களில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டம் நடத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கும் பொதுமக்களை கைது நடவடிக்கை மூலம் அச்சுறுத்தியும், இழப்பீடு என்பதை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது.
எப்படியாவது மத்திய அரசின் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை முன்னெடுக்கும் இந்த மக்கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, இந்த துரோக ஆட்சிக்கு மக்கள் சக்தியின் வலிமையையும், உணர்வையும் எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது.
விளை நிலங்களையும் விவசாயத்தையும் காத்திட வருகிற ஜூலை 6ம் தேதி திருவண்ணாமலையிலும், 9ம் தேதி தருமபுரி மாவட்டம், அரூரிலும் மாலை 5 மணியளவில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications