நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: மக்கள் பீதி
நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பருத்திபாடு அருகே உள்ள மேலசிறியந்தூர் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேரக்குளம் பஞ்சாயத்திற்கு உள்பட்டது. இந்த கிராமத்தில் வசிக்கும் பலர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேகமாக பரவி வரும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு, குறிப்பாக சிறுவர்களும், சிறுமிகளுமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கருங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலரும் கூறுகையில், உடல் முழுவதும் கடும் வலி இருப்பதாகவும், மூட்டு வலி அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும் இதன் அருகே உள்ள நெல்லை மாவட்ட கிராமங்களான பெருமாள்நகர், வடக்கு இடையான்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்தக் காய்ச்சலின் தாக்கம் உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2012ல் டெங்கு காய்ச்சல் பரவியது. இதில் பலர் உயிர் இழந்தனர். பல்லாயிரக்கனக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications