பட்டு நெசவாளர்களிடம் குறை கேட்டு கலந்துரையாடிய அன்புமணி
காஞ்சிபுரம்: பாமகவின் முதல்வர் வேட்பாளரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரத்தில் நடந்த பட்டு நெசவாளர் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு நெசவாளர்களுடன் பேசினார். அவர்களிடம் குறைகளைக் கேட்டார். பாமக ஆட்சியமைத்தால் என்னென்ன செய்யும் என்பது குறித்தும் விவரித்தார்.
காஞ்சீபுரத்தில் பாமக சார்பில் பட்டு நெசவாளர் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் நெசவாளர்களிடம் கலந்துரையாடி அவர்களது குறைகளைக் கேட்டார் அன்புமணி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாமக ஆட்சிக்க வந்தால்
பாமக ஆட்சிக்கு வந்ததும் பட்டு நெசவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தஞ்சையில் விவசாயிகள் பிரச்சினை, கோவையில் தொழில்முனைவோர் பிரச்சினை, ராமநாதபுரத்தில் மீனவர் பிரச்சினை, காஞ்சீபுரத்தில் நெசவாளர் பிரச்சினை என அனைத்து தரப்பினரின் பிரச்சினைகளையும் கேட்டு வருகிறேன். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

பட்டுப் பூங்கா அமைப்போம்
காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், திருபுவனம் பகுதிகளில் பாமக ஆட்சிக்கு வந்ததும் பட்டு பூங்கா அமைக்கப்படும். ரா சில்க் எனப்படும் கச்சா பட்டு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 15 சதவீத வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உருப்படியில்லாத திமுக - அதிமுக ஆட்சிகள்
பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும். திமுக தன்னம்பிக்கையை இழந்து விட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது. தமிழகம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. ஆனால் எந்த திட்டமும் உருப்படியாக நிறைவேற்றப்படவில்லை.

விரைவில் வேட்பாளர் பட்டியல்
திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். பாமக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications