டோல்கேட் ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ராமதாசுக்கு சம்மன்
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில், சுங்கச்சாவடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் காரில் சென்றார். அப்போது, அவருடன் வந்தவர்கள் சுங்கச்சாவடியை உடனடியாகத் திறக்கவில்லை எனக் கூறி ஊழியரை தாக்கினர். இதில் சுங்கச்சாவடியும் சூறையாடப்பட்டது.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்பட 7 பேர் மீது உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ் வழக்கு வியாழக்கிழமை நீதிபதி பழனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில் அன்புமணி ராமதாசின் பாதுகாவலர் சக்திவேல் மற்றும் வழக்கில் தொடர்புடைய ஜீவானந்தம், ராஜா, அய்யனாரப்பன், வெங்கடேசன் உள்பட 6 பேர் ஆஜராயினர்.
அன்புமணி ராமதாஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ் வழக்கை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.