தமிழக கிராமம் மீது 3000 ஆந்திர மீனவர்கள் திரண்டு தாக்குதல்!! போலீசாருக்கு சராமரி ஈட்டி குத்து!!
பொன்னேரி: பழவேற்காடு ஏரி அருகே சின்னமாங்கோடு என்ற தமிழக மீனவ கிராமம் மீது 3000 ஆந்திர மீனவர்கள் நேற்று கொடூர தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். இதில் தமிழக போலீசார் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களாக ஆந்திர மாநில மீனவர்கள், தமிழக எல்லைக்குள் வந்து வலை விரித்து மீன் பிடித்து செல்வதாக பெரிய மாங்கோடு, மாங்கோடு புதுக்குப்பம் ஆகிய தமிழக பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராமத்தினர் பொன்னேரி கோட்டாட்சியர் மேனுவல்ராஜிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆந்திர மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் பொதுவாக மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் மேனுவல்ராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழவேற்காடு ஏரியில் இரண்டு மாநில மீனவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மோதலின்றி மீன் பிடிப்பது என ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை சின்ன மாங்கோடு மீனவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆனால் 400 படகுகளில் வந்த ஆந்திர மீனவர்கள் 2000 பேர், சின்னமாங்கோடு கிராமத்துக்குள் நேற்று நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின் என்ற போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆந்திர மீனவர்கள் கையில் வைத்திருந்த ஈட்டியால் ஸ்டாலினின் மார்பில் குத்தினர்.
இதை அடுத்து அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், பெரியபாளையம் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்டோரையும் அவர்கள் ஈட்டியால் குத்தியுள்ளனர். அத்துடன் தடுக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோரையும் தாக்கினர்.
பின்னர் சின்ன மாங்கோடு கிராமத்துக்குள் புகுந்த ஆந்திர மீனவர்கள் அங்குள்ள குடிசை வீடுகளை கொளுத்தினர். 70-க்கும் மேற்பட்ட மீன் பிடிப்படகுகளுக்கு தீ வைத்தனர்.
இதில் காயமடைந்த ஆறு போலீஸார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் கண்காளிப்பாளர் ஸ்டாலின் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications