கூண்டை விட்டு கிளி வெளியே வரப்போகுதாமே.. அண்ணாமலை சூசகமாக சொன்ன ‘கதை’.. அப்போ அதிமுகவுக்கு சிக்னலா?
தூத்துக்குடி : அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், தனித்துப் போட்டி எனக் கூறும் வகையில் சூசகமாகப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இத்தனை ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி தற்போது கூண்டை விட்டு வெளியே வரத் தயாராகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கூண்டுக்கிளி கதை மூலம், கூட்டணி என்ற கூண்டுச்சிறையில் இருந்து பாஜக வெளிவரப்போகிறது என்பதையே உணர்த்துகிறார் அண்ணாமலை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ராகுல்காந்தி பதவி பறிப்பு! ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது -ஸ்டாலின்
அண்ணாமலை கோபம்
தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் சென்னையில் நடந்தபோது பேசிய அண்ணாமலை, ஒருவேளை தேசியத் தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி, ஒரு தொண்டனாகவே இருந்துவிட்டுப் போய்விடுவேன். அதிமுக நம்மைவிட்டு விலக வேண்டும் என்று தொடர்ந்து செயலாற்றிவரும் நிலையில், நாம் ஏன் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டும் எனக் கொதித்திருதார். இது பாஜக - அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
டெல்லியில் சந்திப்பு
இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜகவின் மேலிட தலைவர்களைச் சந்தித்து ஆலோசித்துவிட்டுத் திரும்பியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அண்ணாமலை, கூட்டணியைப் பொறுத்தவரை குழப்பமே இல்லை. பாஜகவுக்கோ எனக்கோ எந்தக் கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் வருத்தமோ, ஆதங்கமோ கிடையாது. அதிமுக 1972இல் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் வளர வேண்டுமென நினைப்பதில் தவறு இல்லை. அதேபோல, பாஜகவும் வளர வேண்டும் என நினைப்பதிலும் தவறு இல்லை. அப்படி நினைக்கும்போது, கூட்டணிக்குள் சிறு சிறு சிராய்ப்புகள் வருவது இயல்புதான் என்றார்.
களம் மாறிவிட்டது
இந்நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடும் என்கிற ரீதியில் இன்று பாஜக கூட்டத்தில் சூசகமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று நடைபெற்ற மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் களம் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. மீனவர்கள் பிரச்சனையை வைத்து அரசியல் செய்தது காங்கிரஸ், திமுக கட்சிகள்.
கூண்டுக் கிளி கதை
சில நேரங்களில் நம்மை கூண்டுக்குள் இருக்கும் கிளிகளைப் போல் பார்க்கக் கூடாது. கிளி 30 ஆண்டுகளாக கூண்டுக்குள்ளேயே இருக்கிறது. அதை ஒரு நாள் திறந்துவிட்டால் அது சொல்லும், 'திடீரென்று கூண்டை திறந்துவிட்டு என்னை பறந்து போ என்றால் எனக்கு பறக்க தெரியாது' எனச் சொல்லும். அந்தக் கிளி பறக்கும் என்றும் அந்த கூண்டு இப்போது திறக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறேன். அந்த கிளி தயாராக இருக்கிறது என்பதை நம்புகிறேன். களம் மாறிவிட்டது.
பாஜகவால் பறக்க முடியும்
தமிழ்நாட்டில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கிளி பறப்பதற்கு தயாராகிவிட்டது. பாஜகவால் பறக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனிக்குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. பாஜகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கலாம். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸை விட பாஜக அதிகமாகவே செய்துள்ளது.
புதிய பாதை
புதிய பாதையில் பயணம் செய்ய நாம் தயாராக வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி நடக்க ஆரம்பித்துவிட்டது. நமக்கான நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் பாஜக பயணிக்க புதிய பாதை தேவைப்படுகிறது. பிரதமர் மோடியை வைத்தும் சாதனைகள் செய்ததை வைத்தும் வாக்குகள் கேட்க வேண்டும். 10 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள் என யாரும் நம்மைப் பார்த்து கேட்கமாட்டார்கள். தமிழ்நாட்டின் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கும் செய்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.
சூசகம்
இன்றைய பாஜக கூட்டத்தில் கூண்டுக்கிளி கதையைச் சொல்லி அண்ணாமலை பேசியிருப்பதால், பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி 2024 தேர்தலைச் சந்திக்க தயாராகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதுவும் குறிப்பாக டெல்லிக்குச் சென்று வந்த அன்றே, அண்ணாமலை இவ்வாறு பேசியிருப்பது பாஜகவினர் மத்தியிலும் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு டெல்லி மேலிடத்தில் சாதகமான பதில்கள் கிடைத்துவிட்டதோ என்ற யூகங்களும் எழுந்துள்ளன.