விடுதலை சிறுத்தைகள் 7 பேருக்கு 7 விருதுகள் அறிவிப்பு! சபாநாயகர் அப்பாவுவுக்கு காமராஜர் விருது!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சபாநாயகர் அப்பாவு உட்பட 7 பேருக்கு 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் விசிக சார்பில் கொடுக்கப்படுகின்றன.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள பதிவு வருமாறு;
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

கடந்த ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்குகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம். முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதல்வர் சித்தாரமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா அவர்களுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜா அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2023-ஆண்டுக்கான
விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:
1) அம்பேத்கர் சுடர் :
திரு. திபங்கர் பட்டாச்சார்யா,
பொதுச் செயலாளர், சிபிஐ (எம்.எல்).
2) பெரியார் ஒளி:
திரு. து.ராஜா ,
பொதுச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3) காமராசர் கதிர்:
திரு. மு. அப்பாவு,
தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.
4) அயோத்திதாசர் ஆதவன்:
திரு. இராஜேந்திரபால் கௌதம், மேனாள் அமைச்சர்,
டெல்லி மாநில அரசு.

5) மார்க்ஸ் மாமணி:
திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர், சிபிஐ (எம்)
6) காயிதேமில்லத் பிறை:
முனைவர் மோகன் கோபால், மேனாள் துணைவேந்தர்,
சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.
7) செம்மொழி ஞாயிறு :
திருமதி.தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.
விசிக விருதுகள் வழங்கும் விழா
மே 28, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications