மீண்டும் ஒரு காற்றழுத்தம் வருகிறது... வானிலை நிபுணர்கள்
சென்னை: வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் நீடித்து வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பின்னர் தாழ்வு மண்டலமாக மாறி நாகை அருகே கரையைக் கடந்தது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் நல்ல மழை கிடைத்தது.
மீண்டும் வரும் காற்றழுத்தம்
இந்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
48 மணி நேரத்திற்குப் பிறகு
48 மணி நேரத்திற்குப் பிறகு இந்த தாழ்வு நிலை ஏற்படலாம் என்றும் இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய வங்கக் கடலில்
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மத்திய வங்கக் கடலில் மிகச் சிறிய அளவில் உருவாகியுள்ளது. இது மேர்கு வடக்கு நோக்கி நகரக் கூடும். அதாவது ஆந்திரா, ஒரிசாவை நோக்கி இது நகரலாம். வியாழக்கிழமை முதல் இது நகரலாம்.
அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில்
வழக்கமாக வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வங்கக் கடலில் அதிக அளவில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படும். ஆனால் தற்போது அதிக அளவிலான காற்றழுத்தங்கள் ஏற்படவில்லை. அதேசமயம், இன்னும் பருவ மழைக்காலம் நீடிப்பதால் அதிக அளவிலான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.