Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்- அமைச்சர் ரகுபதியின் பதிலால் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் கடும் கோபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அளித்த பதிலால் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தெரிவித்த பதில், பகுத்தறிவாளர்களாலும், விவரந்தெரிந்த கல்வியாளர்களாலும் ஏற்கத்தக்கது இல்லை என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படுமா என்று திமுக எம்.எல்.ஏ. எழிலன் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி, மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது; ஆகையால் சட்டம் கொண்டுவர முடியாது என கூறியிருந்தார். தமிழக சட்ட அமைச்சரின் இந்த பதில்தான் இப்போது திமுகவை ஆதரிக்கும் பெரியாரிஸ்டுகள், இடதுசாரிகளை கடுமையாக கோபம் அடைய வைத்துள்ளது.

DMK2

மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கக் கூடிய சட்டங்கள் அமலில் இருக்கும் நிலையில் பகுத்தறிவு பகலவன் எனப் போற்றப்படுகிற தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில், திராவிட சித்தாந்தத்தின் கீழ் ஆட்சி நடத்தும் திமுக அரசில் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் சட்ட அமைச்சர் எப்படி பேசலாம் என்பதும் பெரியாரிஸ்டுகள்- இடதுசாரிகளின் அதிருப்தியாகும்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளதாவது: மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்துவிட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருப்பது மூட நம்பிக்கையை பரப்பி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்.

பிற மாநிலங்களில் சட்டங்கள்

மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் பொருந்தாத மூடநம்பிக்கை என்பது வேறு. மக்களிடம் பரப்பப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர் பலி உட்பட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. சமூக சீர்திருந்த கருத்துக்கள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதுபற்றிய பகுத்தறிவுக் கேள்வி ஒன்றுக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறிய பதில், பகுத்தறிவாளர்களாலும், விவரந்தெரிந்த கல்வியாளர்களாலும் ஏற்கத்தக்க பதில் இல்லை என்பதை மிகுந்த வேதனையோடும், வருத்தத்தோடும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

அண்ணா, கருணாநிதி அரசு இல்லையா?

மூடநம்பிக்கை' என்ற சொல்லிலிருந்தே, (நன்)நம்பிக்கை என்பது வேறு; மூடநம்பிக்கை என்பது வேறு என்று தெளிவான பொருள் பிரதிபலிக்கவில்லையா? அதுபற்றி, ''இது அண்ணா, கலைஞர் அரசு என்ற அடிப்படையை'' அறவே புறக்கணிக்கும் வகையில், சட்ட அமைச்சரின் பதில் அமையலாமா?

புதுக்கோட்டையில் மூடநம்பிக்கைகள்

அமைச்சரது மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக நரபலி, மாந்திரீகம் என்ற பெயரால், குடும்பப் பெண்களின் நகைகளைப் பறிப்பது, ஏமாற்றுவது, பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடப்பது எந்த நம்பிக்கை அடிப்படையில்? அவற்றை நியாயப்படுத்த முடியுமா?
இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி, கலைஞர் ஆட்சியின் மறுபதிப்பு - தொடர்ச்சி என்ற நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் - பதில் பகுத்தறிவாளர்களால் ஏற்கத்தக்கதா?

அமைச்சர்களுக்கு எதுவுமே தெரியாதா?

கொள்கைத் துடிப்புடன் செயல்பட்டு, கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாது, விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்று முழங்கும், அதன்படியே நடக்கும் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்குப் பகுத்தறிவுப் பாசறை, பயிற்சி வகுப்புகள் முதலியன நடத்தி, வெளியீடுகள் வழங்கி பக்குவப்படுத்துவது பற்றியெல்லாம் சில அமைச்சர்களுக்குத் தெரியாதா, புரியாதா? போகிற போக்கில் பதில் கூறுவதா, இந்த முக்கிய கொள்கைப் பிரச்சினையில்?

மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் அவசியம்

இந்தப் பிரச்சினையில், இக்கருத்தினை நமது முதலமைச்சர் ஏற்காமல், மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும். தவறுகள் திருத்தப்படவேண்டும். தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ''கடவுள் பெயரால்'' என்பதைத் தவிர்த்து, ''உளமார'' என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா? நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள்! நமது முதலமைச்சர் ஆழ்ந்து சிந்தித்து, இதற்குத் தக்க பதிலும், பரிகாரமும் காணவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள். பிரபல கல்வியாளர் வேலூர் வி.அய்.டி. வேந்தர் விசுவநாதன் அவர்கள், இந்த வேண்டுகோளை பல மேடைகளில் வற்புறுத்தியுள்ளார் என்பதும் நாம் தரும் கூடுதல் தகவல் ஆகும்! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதிக்கு திவிக கடும் கண்டனம்

திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன்: தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படுமா என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கேள்வி எழுப்பினார், இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில் மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது; எனவே சட்டம் கொண்டுவர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

பகுத்தறிவு பாடம்- வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார். இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது.மகாராஷ்டிரம் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் அமலில் இருக்கிறது கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு ஒன்றை உருவாக்கினார்; பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம் திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது.

ராமன் சமூக நீதியின் சின்னம் என பேசிய அமைச்சர் ரகுபதி

இவை எல்லாவற்றையும் புறம்துள்ளி விட்டு ஏற்கனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார் பேரவை தலைவரும் இதை நியாயப்படுத்துகிறார். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த அமைச்சர்கள் இப்படி எல்லாம் தங்கள் பிற்போக்கு கருத்துகளை பேசிக்கொண்டு ஆட்சிக்கு மதச்சாயம் பூசுவது ஆட்சியை களங்கப்படுத்துவதாகும். இவ்வாறு விடுதலை ராசேந்திரன் கூறியுள்ளார்.

அமைச்சர் ரகுபதியின் 'ராம ராஜ்ஜிய சர்ச்சை'

சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றிருக்கின்ற சமூகநீதியின் காவலர் கடவுள் ராமர்தான். சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்துக்குச் சொன்னவரும் கடவுள் ராமன். எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் கடவுள் ராமர். அந்த தசரனது மகன் ராமன்தான், விபீஷினனையும், குகனையும், சுக்ரீவனையும் ஏற்றுக் கொண்டார்; ஏனெனில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமரின் காவியம் என பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+