தமிழகத்தை 60 மாவட்டங்களாக பிரித்தால் வளர்ச்சி சாத்தியமா?
தமிழகத்தில் தற்போதுள்ள 32 மாவட்டங்களையும் பிரித்து 60 மாவட்டங்களாக ஆக்கினால் மாநிலத்தில் சரிசமமான வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்கிற முழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள மாவட்டங்களை 60 ஆக பிரித்து, அரசு நிர்வாகம் செயல்படத் தொடங்கினால் மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்கிறார்கள் அரசியல் கட்சியினர். ஆனால் மாவட்டங்களின் எண்ணிக்கையை கூட்டுவதுடன் காலி பணியிடங்களை நிரப்புவதும் மிக முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இங்கிலாந்திடம் இருந்து இந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்றது முதல், பிரதேச வாரியாக பல்வேறு பிரிவினைகள், பகுதி இணைப்புகள் என்று நடந்த வண்ணம் உள்ளது. நாடு சுதந்திர அடைந்தபோது இருந்த மாநிலங்களின் எண்ணிக்கை 1950க்கு பிறகு கூடுதலாக ஆகியது.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கி இருந்த மதராஸ் மாகாணம் 1956-ம் ஆண்டு தனித்தனி மாநிலங்களாகின. பின்னர் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் 1967-ம் ஆண்டு மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது.
சேலத்திலிருந்து முதல் மாவட்டம் பிரிப்பு
தமிழகத்தின் பெரிய மாவட்டங்கள் இரண்டு மூன்றாக பிரிக்கப்பட்டு இப்போது 32 மாவட்டங்களாக உள்ளன. சென்ற 1966ம் ஆண்டு சேலம் மாவட்டதிலிருந்து தர்மபுரி மாவட்டம் உதயமானது. பின்னர் 1974ல் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் , 1979ல் கோயம்புத்தூரை இரண்டாகப் பிரித்து ஈரோடு மாவட்டம் என்று உருவாக்கப்பட்டது.
நாகப்பட்டினம் திருவாரூர்
அதே போல 1985ல் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உதித்தது. அதே போல சிவகங்கை , விருதுநகர் மாவட்டங்கள் உருவாகின. பின்னர் 1986ம் ஆண்டில் தூத்துக்குடி, 1989ல் வேலூர், திருவண்ணாமலை, 1991ல் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
விழுப்புரம் கடலூர்
அடுத்து வந்த ஆண்டுகளில் விழுப்புரம், கடலூர், கரூர், பெரம்பலூர், தேனி, நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2004ல் திருப்பூர் மாவட்டம் உதயமானது.
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேறும்
மாவட்ட நிர்வாகம், கிராமங்களுக்கு நேரடியாக தொடர்புடைய ஒன்று. மாநில அல்லது மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவே மக்களைச் சென்றடைய முடியும். அதனால் மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மக்கள் நலத்திட்டங்கள் சேரமுடியும் என்பதே அரசியல் கட்சிகளின் வாதமாக இருக்கிறது.
60 மாவட்டங்களாக மாறினால் ?
60 மாவட்டங்கள் என எண்ணிக்கை கூடினால், ஆட்சியர்கள் எண்ணிக்கைதான் 60 ஆகும். வேறு எந்த ஒரு மாற்றமும் நடக்காது. ஏன் எனில், அரசின் பெரும்பாலான துறைகளில் லட்சக்கணக்கில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பி மக்கள் சேவையைத் துரிதப்படுத்த அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் நல திட்டங்கள், அரசின் பிற சேவைகள் சென்றடைவதில் தேக்கம் ஏற்பட்டு அதுநீடிக்கும். ஆகையால் அதிக மாவட்டங்கள் பிரிக்கப்படும் சூழலில் காலி பணியிடங்களையும் நிரப்பினால்தான் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.