தமிழகத்துக்குள் புகுந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த ஆந்திரா போலீஸ்! மே.வங்கத்திலும் 'ரெய்டு'!
சென்னை: தமிழகத்துக்குள் புகுந்து செம்மரக்கட்டைகளை ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் தமிழக போலீசுக்கு தெரிவிக்காமல் செம்மரக் கட்டைகளை ஆந்திரா போலீஸ் எடுத்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மேற்கு வங்கத்திலும் ஆந்திரா போலீசார் சோதனை நடத்தி செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த கொந்தளிப்பு தமிழகத்தில் இன்னும் அடங்கவில்லை. இந்நிலையில் செம்மரம் கடத்தியதாக சில நாட்களுக்கு முன் கருணா என்பவரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆவடி அருகே காட்டூர் சிட்கோவில் தனியார் கிடங்கு ஒன்றில் 3,375 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழக போலீஸாருக்கு தெரிவிக்காமல் ஆந்திராவுக்கு அம்மாநில காவல்துறையினர் கொண்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்திலும்...
இதேபோல் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலும் ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி 11 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மியான்மரைச் சேர்ந்த ராஜன் என்பவர் சிலிகுரியில் நடத்தி வந்த குடோனில்தான் இந்த செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்த இந்த செம்மர கட்டைகள் மதிப்பு ரூ 10 முதல் ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications