ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி.. பகுஜன் சமாஜ் மேலிட பிரதிநிதிகளை ஆதரவாளர்களுடன் அலறவிட்ட சம்பவம்!
சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தனுக்கு எதிராக தமது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக, அதன் அடையாளமாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். தலித் மக்களின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு கொலை- கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான ரவுடிகள் அடுத்தடுத்து சிக்கினர். தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகரை அச்சுறுத்தி வந்த கொலைகார கூலிக் கும்பல்கள் ஒருங்கிணைந்து ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அரங்கேற்றி இருந்தன.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆனந்தன் நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ராம்ஜி கவுதம், முன்னாள் எம்பி ராஜாராம் ஆகியோர் தமிழ்நாடு வருகை தந்தனர்.
இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்று திரண்டு நேரில் சந்தித்தனர். அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆவேசமாக புகார் தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் நியமித்த பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்திருக்காங்க.. கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கை என்ன என்று தெரியுமா? இவ்வளவு கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்துவிட்டு ஈஸியாக பொறுப்புகளை விட்டுக் கொடுத்துவிடுவோமா? அப்படி எல்லாம் கொடுக்கமாட்டோம்.. மாநில தலைவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வாதிட்டார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
அத்துடன் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள், மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு அளித்து முழக்கமிட்டனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.












Click it and Unblock the Notifications