மதுரை: 10ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்; 14ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்
மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றுவருவதை ஒட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும் தினங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான்காம் நாள் திருவிழா
நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் பிரியாவிடை மற்றும் அம்மன் தங்கப்பல்லக்கில் வீதி உலா வந்து வில்லாபுரம் பாகற்காய் மண்டபத்தில் எழுந்தருளினர்.
வேடர் பறிலீலை
சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமி, அம்மன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதியில் எழுந்தருளினர். இன்று மாலை திருக்கோயில் வளாகத்தில் உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர்பறிலீலை நடைபெறுகிறது.
குவியும் பக்தர்கள் கூட்டம்
சித்திரைதிருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளிமாநில பக்தர்களும் கோவிலுக்கு வருகை தருகிகின்றனர். இதனால் கோவிலில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த பரிசோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மீனாட்சி திருக்கல்யாணம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
அழகர் ஆற்றில் இறங்குதல்
தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இம்மாதம் 14ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை காண மதுரையில் லட்சக்கணக்காண பக்தர்கள் கூடுவார்கள்.
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மதுரையில் உள்ள சுமார் 3 ஆயிரம் போலீசாருடன் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங் களில் இருந்தும் சுமார் 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக வருகிற 9ம்தேதி காலையில் வெளிமாவட்ட போலீசார் மதுரைக்கு வர இருக்கிறார்கள்.
போலீசார் கண்காணிப்பு
இவர்கள் வைகை ஆறு, மீனாட்சி அம்மன் கோவில் பகுதி, தல்லாகுளம் பெருமாள் கோவில் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் மப்டி போலீசாரும் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருவார்கள்.
60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து
மதுரை பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்தசபை சார்பாக கடந்த 14 ஆண்டுகளாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தன்று விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 12,000 சதுர அடி சாமியானா பந்தலில் வருகிற 10-ந்தேதி அன்று காலை முதல் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு திருக்கல்யாணம் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவையான சாதங்கள்
விருந்தில் கல்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளிசாதம், தயிர்சாதம், உருளைக்கிழங்கு கூட்டு, பச்சடி, ஊறுகாய், தண்ணீர் பாக்கெட்டுடன் பாக்கு தட்டில் வைத்து வழங்கப்படும்.
காய்கறி வெட்ட அழைப்பு
விருந்துக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி கொடுக்க விரும்புவோர் 8,9-ந்தேதிகளில் விருந்து நடைபெறும் சேதுபதி பள்ளியிலேயே கொடுக்கலாம். 9-ந்தேதி மாலை 4 மணி முதல் சேதுபதி பள்ளியில் உள்ள ரமணா ஹாலில் காய்கறிகள் வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதில் ஈடுபட விரும்புவோர் தங்கள் வீட்டிலிருந்து அரிவாள்மனை, கத்தியுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடையாள அட்டை அவசியம்
9-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு மாப்பிள்ளை விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும். உணவு வழங்கும் சேவை செய்ய விரும்புபவர்கள் 8-ந்தேதி தங்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.