ஜெயலலிதா வீட்டு காவலில் இருக்கக் கூட தயார்.. உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த வழக்கறிஞர் நாரிமன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை வீட்டுக் காவலில் வைக்கக் கூட உத்தரவிடுங்கள் என்கிற தொனியில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதிட்டதால் தலைமை நீதிபதி தத்து அதிர்ச்சியடைந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாத விவரம்:
- ஜெயலலிதா ஜாமீன் மனு மீது ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா சார்பாக இன்று காலை 11.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜரானார்.
- பாலி நாரிமன் தனது வாதத்தின் தொடக்கத்தில், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காதது தவறு என்று கூறி பல்வேறு வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார்.
- பின்னர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏராளமான ஆவணங்களை பரிசீலிக்கத் தவறிவிட்டார். அத்துடன் ஜெயலலிதா மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்பதையும் அவர் கவனிக்கவில்லை என்றும் நாரிமன் வாதிட்டார்.
- அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தத்து, மிஸ்டர் நாரிமன் இந்த வழக்கு முடிவடைய எத்தனை ஆண்டுகாலம் ஆனது என்று கேள்வி எழுப்பினார்.
- இதற்கு பதிலளித்த நாரிமன், "பல ஆண்டுகள் நடைபெற்றது" என்றார்.
- மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தற்போது தண்டனையை நிறுத்தி நான் உத்தரவு போட்டால், நீங்கள் மேல்முறையீட்டு மனுவை முடிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
- இதற்கு பதிலளித்த பாலி நாரிமன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க எனது கட்சிக்காரர் சார்பாக நான் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கிறேன் என்றார். ஜெயலலிதா தரப்பில் எந்த ஒரு தாமதமும் ஏற்படுத்தமாட்டார்கள் என்றும் உறுதி அளித்தார்.
- "இந்த வழக்கு ஆண்டுக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குற்றம்சாட்டப்பட்டோரின் நடத்தையை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, சிறப்பு நீதிமன்றமோ கருத்தில் கொள்ளக் கூடாதா? என்றார் தலைமை நீதிபதி. இதனைத் தொடர்ந்து தமது கருத்தை நாரிமன் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்றார்.
- மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா தனது வீட்டிலேயே இருக்கவும் தயார் (வீட்டுச் காவல் போல) என்றார் நாரிமன்
- இந்த வாதத்தைக் கேட்டு தலைமை நீதிபதி தத்து அதிர்ந்து போனவராக "ஒருவருக்கு ஜாமீன் கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற நடைமுறையில்இல்லாத அசாதாரண உத்தரவுகளையெல்லாம் நாங்கள் பிறப்பிக்க முடியாது என்று நிராகரித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications