போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கடும் டோஸ் விட்ட ஏ.சி.! "வாட்ஸ் அப்"-ல் பரபரபரவும் வீடியோ!!
சென்னை : போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கடுமையான வார்த்தைகளால் காவல் உதவி ஆணையர் எச்சரித்த ஆடியோ வாட்ஸ் அப்-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை காவல் உதவி ஆணையர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்ட ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பெண் துணை கமிஷனர் ஒருவர் இன்ஸ்பெக்டரை கோபத்தில் திட்டும் ஆடியோவும் வெளியானது. பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடையில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட வீடியோவும் வலம் வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடும் பஸ்சில் போதையுடன் பெண் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோவும் வாட்ஸ்அப்பில் வெளியாகி இருந்தது.
சென்னை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல் நிலையத்திலேயே மது அருந்தி விட்டு சீட்டாடிய போட்டோவும் வாட்ஸ் அப்பில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் வயர்லெஸ் மூலம் தனக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் ஆடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
2 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோவில், அதிகாரி கோபத்துடன் பேசி இருப்பது பதிவாகி உள்ளது. தனக்கு மேல் உள்ள அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் பேசும் அவர், ‘ஒவ்வொரு பகுதியிலும் இரவு, மாலை நேர ரோந்து பணிகளை அமல்படுத்த வேண்டும் என்று பலமுறை நான் கூறி இருக்கிறேன். ஆனால் அதை யாரும் சரியாக கடை பிடிக்கவில்லை' என்கிறார்.
குறிப்பிட்ட ஒரு இடத்தின் பெயரை சொல்லி அந்த இடத்தில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு அங்கு பணிபுரியும் ‘விளக்கெண்ணெய்' அதிகாரிகள் தான் காரணம் என்று கோபப்படுகிறார்.
வேறு ஒரு பகுதியின் பெயரை சொல்லி அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை நடந்த போதிலும் பக்கத்து தெருவில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு அந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்களே காரணம் பல இன்ஸ்பெக்டர்கள் கடமையை செய்யாமல் போலீஸ் ஜீப்பை எடுத்துக் கொண்டு தேவையில்லாமல் அவிழ்த்து விட்ட மாடு போல சுற்றித் திரிகிறார்கள். இதுதான் குற்றங்கள் நடைபெற காரணம் என்று திட்டுகிறார்.
ஒரு மணி நேரத்துக்குள் 50 அல்லது 100 வாகனங்களை சோதனையிட முடியாது. ஆனால், முறைப்படி சோதனை செய்தால் 10 வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய முடியும். அதே நேரத்தில் ரோந்து குழுக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும் என்று அறிவுரை கூறுகிறார்.
இவ்வாறு அவர் ஆவேசமாகவும் கோபமாகவும் பேசும் இந்த வயர்லெஸ் உரையாடலை போலீஸ்காரர் ஒருவரே செல்போனில் பதிவு செய்து ‘வாட்ஸ் அப்'பில் பரவ விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.