கம்பி கட்டும் தொழிலாளியைக் கொன்று எரித்து சாம்பலை குளத்தில் கரைத்த அட்டாக் பாண்டி கூட்டாளிகள்!
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த 2 வருடமாக தலைமறைவாக இருக்கும் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து ஒரு வாலிபரைக் கொன்று உடலை எரித்து சாம்பலை குளத்தில் கரைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குருமணி (25). கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியி கூட்டாளிகள் சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இரு தரப்பும் அவ்வப்போது மோதி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் உண்மை தெரிய வந்தது.
குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல மரங்களுக்கு மத்தியில் எரித்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்ததும் சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்து வி்ட்டனர்.
இதையடுத்து சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரது கூட்டாளிகள் செய்த இந்த படு பாதக கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications