ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு- காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட 9 பேர் விடுதலை
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை 2002-ஆம் ஆண்டில் மர்மக் கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது குற்றம்சாட்டி, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் பல அரசு அதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை ராதாகிருஷ்ணன்தான் அனுப்புவதாக நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்தகுமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், சின்னகுமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்துவிட்டனர். ரவி சுப்பிரமணியன் அப்ரூவராகிவிட்டார். சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் தரப்பில் ரவிசுப்ரமணியம் உள்ளிட்ட 81 பேர் சாட்சியம் அளித்தனர். 220 சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயேந்திரர் உள்பட 9 பேரின் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதி ராஜமாணிக்கம் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர். இவ்வழக்கில் பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜமாணிக்கம், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் சுந்தரேசய்யர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications