கால் மாற்றி ஆடிய நடராஜர்... இசைத்தூண்கள்- மதுரை ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் அற்புதமானது. சிற்பங்கள், ஓவியங்கள், நடராஜர் என காண கண்கோடி வேண்டும்.
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி கோவிலில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் அருங்காட்சியமாக அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் சேதமடைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது.
இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
கால் மாற்றி ஆடிய நடராஜர்
சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாகும் வெள்ளியம்பலம் என்று போற்றப்படுகிறது. சிவபெருமானை தரிசிக்க செல்லும் முன்பாக வெள்ளியால் செய்யப்பட்ட நடராஜரை தரிசிக்கலாம். பல ஆலயங்களில் இடது கால் தூக்கி நடனம் ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
அழகான மண்டபம்
1569ஆம் ஆண்டு ஆயிரம்கால் மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் சிற்பக்கலையின் சிறப்புகளை விளக்கும் ஒரு மண்டபமாக திகழ்கிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் 15 தூண்களுக்கு பதிலாக இரண்டு கோவில்களும் உள்ளன. நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் வடிவம்
இந்த ஆயிரம் கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்கால ஓலைச்சுவடி, ஓவியங்கள், பழங்கால சிலைகள், மீனாட்சி அம்மன் கோவிலின் முழு வடிவமும் மினியேச்சர் வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இசைத்தூண்கள்
இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.
ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன.
மீனாட்சி அம்மனும் தேரும்
மதுரை சித்திரை திருவிழாவின் போது நான்கு மாட வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறும். அந்த தேரின் சிறிய வடிவம் இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பாக அழகிய மீனாட்சி அம்மனின் சிற்பமும் அமைந்துள்ளது.
தெய்வீக திருமணம்
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருமணக்கோலம் ஓவியமாக வடிக்கப்பட்டு இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஓவியத்தை கண்டு தரிசிப்பது வழக்கம். இன்றைய தீ விபத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த கலைப்பொக்கிஷங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்விற்கு பிறகே கூற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.