நாந்தான் 'அம்மா'வுக்கு நெருக்கமாச்சே.. எதுக்கு இத்தனை கேஸ்.. அரசக்குமார் ஆச்சரியம்!

தன் மீது போடப்பட்டுள்ள அத்தனை வழக்குகளையும் சட்ட ரீதியாக உடைத்துக் கொண்டு வெளியே வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசக்குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்வி நிறுவன அனுமதி வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல வழக்குகள் அவர் மீது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் செல்லத்துரை என்பவர் 2006ம் ஆண்டு பி.டி.அரசகுமார் என்னிடம், தான் தொடங்க உள்ள கல்வி நிறுவனத்தில் அதிகமான வருமானம் கிடைக்க உள்ளது. அதனால் நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி பணம் ரூ.5 லட்சம் வாங்கினார். அதன் பிறகு அந்த பணமும் தரவில்லை. கணக்குகளும் காட்டவில்லை.
இது பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்த அரசகுமாரிடம் கேட்க சென்ற என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்று கொடுத்த புகாரின் பேரில் சிறையில் இருக்கும் அரசக்குமாரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பி.டி.அரசகுமார் அங்கிருந்த செய்தியாளர்களிடம், நான் 1989 முதல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவன். அப்படி இருக்கும் போது ஏன் என் மீது இத்தனை வழக்குகள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போது போடப்பட்ட வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நீதிபதியிடம் சொல்லிவிட்டேன். விரைவில் சட்டப்படி எல்லா வழக்குகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications