பள்ளிக்கட்டணம் சர்ச்சை: பாலாவித்யா மந்திர் முதல்வர் மாற்றம்; 9பேர் பணிநீக்கம்- பெற்றோர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்த விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளான சென்னை பால வித்யா மந்திர் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ் ராகவன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக எஸ்.சுஜாதா புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை புதன் கிழமை இரவு அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை செயலதிகாரி உள்ளிட்ட 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனைக் கண்டித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளி முன்பு பரபரப்பு நிலவுகிறது.

Bala Vidya Mandir fee row: principal transfer

கூடுதல் கட்டணம் வசூல்

சென்னை, அடையாறு காந்திநகரில் உள்ள, 'பாலவித்யா மந்திர்' என்ற பள்ளி, சிபிஎஸ்இ., பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது. அங்கு, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ளன. இங்கு 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பால பிருந்தாவன் சொசைட்டி, இந்த பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

முதல்வர் ஆதரவு

நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பெற்றோர்களின் போராட்டத்திற்கு பள்ளியி தலைமை செயலதிகாரி நாதனும், பள்ளி முதல்வர் சீனிவாச ராகவனும் ஆதரவு குரல் கொடுத்தனர்.

சிங்காரவேலு கமிட்டி

தமிழக அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடமும் புகார் செய்தனர். இதையடுத்து அந்த கமிட்டி விசாரணை நடத்தி, ‘கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, அப்படி வசூலித்து இருந்தால் கூடுதல் கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.

பள்ளி சுற்றறிக்கை

இந்நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கு மேலும் ஒரு நெருக்கடி வைக்கப்பட்டது. அதில் கட்டண விவகாரத்தில் 'விருப்பம் - 1, விருப்பம் - 2' என்ற ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

சிறப்பு வகுப்புகள் மறுப்பு

அதில், விருப்பம்-1-ன் கீழ், பெற்றோர்கள் சிங்காரவேலன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைச் செலுத்தினால், தினசரி, 4, 5 மணி நேரம் மட்டும் வகுப்பு நடத்தப்படும், சிறப்பு கல்வி வசதிகள் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிக பீஸ் கட்டுங்கள்

விருப்பம்-2-ன் கீழ், பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணம் செலுத்தினால் காலை 8:30 முதல் மாலை, 3:40 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும், 59 வகையான சிற்ப்பு கல்வி சேவைகள் வழங்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோர் அதிர்ச்சி

இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான இந்த சுற்றறிக்கையை பார்த்ததும் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்களை பிரித்தாளும் நிலையை உண்டு பண்ணும். பள்ளியில் ஏழை, பணக்கார மாணவர்கள் என ஏற்ற தாழ்வுடன் மாணவர்களை நடத்தினால் அவர்களது மனநிலையை பாதித்துவிடும். அதனால் 2 விதிகளையும் ஏற்று கொள்ள கூடாது என பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

பள்ளி நிர்வாகம்

இதையறிந்த பள்ளி நிர்வாகம், மற்றொரு சுற்றறிக்கையை பெற்றோர்களுக்கு அனுப்பியது. அதில், ‘2 விதிகளில் எந்த விதியையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் முதல் விதிக்கு நீங்கள் சம்மதிப்பதாக எடுத்து கொள்வோம்'' என கூறப்பட்டிருந்தது. மேலும் அடுத்த ஆண்டு, முதல் விதியை கடைபிடிக்கும் மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி விட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் பெற்றோர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. நிர்வாகத்தின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்களும், பள்ளி முதல்வரும் பெற்றோர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினர்.

பெற்றோர் முற்றுகை

அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் 400க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஆசிரியர்களும் களம் இறங்கியுள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

முதல்வர் மாற்றம்

இந்நிலையில், பள்ளிக் கட்டண விவகாரம் தொடர்பாக சிங்காரவேலர் குழு தனது விசாரணையை துவக்கவிருந்தது. ஆனால், அதற்குள் சர்ச்சைக்குள்ளான சென்னை பால வித்யா மந்திர் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ் ராகவன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

பெற்றோர் அதிர்ச்சி

அவருக்குப் பதிலாக எஸ்.சுஜாதா புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதே பள்ளியின் பெருங்குடி கிளையில் முதல்வராக பணியாற்றியவர் ஆவார். இதற்கான சுற்றறிக்கை புதன் கிழமை இரவு அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

9 பேர் பணிநீக்கம்

இதனிடையே தலைமை செயலதிகாரி உள்ளிட்ட ஆசிரியர்கள் 9 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்களும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெற்றோர் வலியுறுத்தல்

பள்ளி மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பணிநீக்கம் செய்யப்பட்ட 9 பேரையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை விசாரணை

அதிக கட்டணம் செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஆசிரியர்களும் பெற்றோருடன் இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+