சிக்குகிறார் பங்காரு அடிகளார் மகன் செந்தில்! மாணவரை தாக்கியதாக போலீஸ் வழக்கு!!
என்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவரை தாக்கிய கல்லூரி தாளாரான பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: என்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாணவரை தாக்கிய கல்லூரி தாளாரான பங்காரு அடிகளாரின் மகன் செந்தில் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் கல்லூரி தாளாளராக உள்ளார். இவர் தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் விஜய் என்பவரை தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர் சிகிச்சைகாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் செந்தில்குமார் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்
இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாகியுள்ளார். பங்காரு அடிகளாருக்கு 2 மகன்கள், அதில் ஒருவர் கோவில் நிர்வாகத்தையும் செந்தில் குமார் பள்ளி கல்லூரிகளை நிர்வாகித்து வருகிறார்.
பராசக்தி கோவிலில் பரபரப்பு
இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வரும் நிலையில் மாணவனை தாக்கி வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த மாணவர்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகனும், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளருமான செந்தில்குமார் மீது கொலை மிரட்டல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
கொலை செய்வோம் என மிரட்டல்
இவர் தனது கல்லூரியில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து, மாணவர் விஜயை கடுமையாக தாக்கியதாகவும், பேஸ்புக்கில் இனிமேல் கல்லூரியை பற்றி அவதூறு பரப்பினால், கொலை செய்வோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் விஜய், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல்மருவத்தூர் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர் விஜயின் தாயார் பஞ்சவர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மீது கொலை மிரட்டல், பெரும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.