நடிகர் சங்கத் தேர்தலில் கைவிட்ட அம்மா... பாவம் சரத்குமார்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி மாஸ் அவுட் ஆனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிமுக தலைமையின் உத்தரவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து 2 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பியது சமத்துவ மக்கள் கட்சி. முதன்முதலாக எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு நுழைந்த சரத்குமார், ஜெயலலிதாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருந்தார்.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு எதிரான மனநிலைக்கு அதிமுக தலைமை மாறக் காரணம் ஜே.கே.ரித்தீஷ் என்று கூறப்படுகிறது. மனோரமா மரணத்திற்கு வந்த ஜெயலலிதா சரத்குமாரை கண்டு கொள்ளாமல் போனதே சரத்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் அதிமுக தலைமை எடுத்த முடிவு, சரத்குமார் அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இந்த தேர்தலில், சரத் தரப்பில் அதிமுகவை சேர்ந்த நடிகர், நடிகைகள் அதிகம் பேர் போட்டியிட இருந்தனர். இதனால் வெற்றி நம்பக்கம் என்று மகிழ்ச்சியடைந்திருந்தார் சரத்குமார்.
இந்த தேர்தலில், சரத்குமார் தரப்பில் அதிமுகவைச் சேர்ந்த குயிலி, பாத்திமா பாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அதிகம் பேர் போட்டியிட இருந்தனர். ஆனால் அதிமுகவினர் யாரும் போட்டியிக்கூடாது என்று தலைமை உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து அவர்கள் ஒதுங்கிக்கொள்ள, சரத்குமார் தரப்புக்கு அது சற்று பின்னடைவாக அமைந்துவிட்டது.
அதே நேரத்தில் விஷால் தரப்பு ஆதரவு நடிகரான ரித்தீஷ், சென்னையில் வசிக்கும் நடிகர்களை தொடர்ந்து கேன்வாஸ் செய்து கொண்டுதான் இருந்தாராம். இதனை அதிமுக தலைமைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலராக விஷால், பொருளாளராக
கார்த்தி, துணைத் தலைவர்களாக பொன்வண்ணன் மற்றும் கருணாசும்; 24 செயற்குழு உறுப்பினர்களில், காளிமுத்து, காமராஜ், சபாபதி, விஸ்வநாதன் ஆகியோர் தவிர, 'பூச்சி' முருகன் உட்பட, 20 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சரத்குமார் அணியில், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, ராம்கி, நிரோஷா, டி.பி.கஜேந்திரன், நளினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விஷால் அணியினரின் வெற்றிக்கு கடுமையான உழைப்பு என்று கூறப்பட்டாலும் வெளியூர்களில் இருந்து வந்த நாடக நடிகர்களுக்கு 'வைட்டமின் ப' கொடுத்து கவனித்தது விஷால் அணியின் ரித்தீஷ்தான் என்கின்றனர். 250 பேருக்கும் ஒரே நிறத்தில் யூனிபார்ம் ஆடைகள் கொடுத்து செமத்தியாக கவனித்தார்களாம். வாக்குப்பதிவு நாள் வரைக்கும் வாக்கு சேகரித்தனர் விஷால் அணியினர், இதுவே அவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்கின்றனர்.
தோல்விக்குக் காரணங்கள்
சரத்குமார் அணியின் தோல்விக்கு, அவர்களின் கட்டுப்பாடற்ற பேச்சே வினையாக அமைந்ததாக, கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தரக்குறைவான விமர்சனத்தை கைவிடாமல், அதை நியாயப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆபாசமாகவும், மிரட்டலும் விடுத்து நடந்த பிரசாரம் மற்றும் பேட்டிகள் எதிராக அமைந்தன.
சிம்பு பண்ணிய வம்பு
சிம்புவும் தன் பங்குக்கு சரத்குமார் அணிக்கு தோல்வியைத் தேடித்தந்தார். ராதாரவி நாய் என்று திட்டினால், நரி என்று கூறி முகம் சுளிக்க வைத்தார். கலைஞனுக்கு ஜாதி, மொழி கிடையாது என்பதை மறந்து, நடிகர் சங்கத்தில், ஜாதி மற்றும் மாநில வேறுபாட்டை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார் ராதிகா.
தரக்குறைவான விமர்சனம்
நடிகர் சிவகுமார் மற்றும் கமல் ஹாசனை தரக்குறைவாக விமர்சித்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. சங்க கட்டடம் தொடர்பாக கூறப்பட்ட புகார்களுக்கு, ஆரம்பத்திலேயே தெளிவான பதில் தராமல், கடைசி நேரத்தில் விளக்கமளித்தனர்.
இளைய தலைமுறை நடிகர்கள்
10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல், பொறுப்பு வகித்தது, புதிய தலைமுறை நடிகர்களுக்கு, விஷால் அணியின் கேள்விகள் நியாயமாக தெரிந்துள்ளது. அதனாலேயே, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று நடுநிலை நடுவர்கள் கூறியுள்ளனர்.
பாவம் சரத்குமார்
தலைவர் பதவிக்கான தேர்தலில் சரத்குமாருக்கு கவுரமான தோல்விதான் என்றாலும், இனி அரசியல் தவிர வேறு தேர்தல்களில் கவனம் செலுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்- நடிகர் சங்கத்தேர்தலில் கைவிட்ட அம்மா, சட்டசபை தேர்தலில் கை கொடுப்பாரா? இல்லை..தவிக்க விட்டு விடுவாரா என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.