விரட்டி விரட்டி கொட்டிய வண்டுகள்: அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்
நெல்லை: நெல்லை அருகே மாணவ, மாணவிகள், பொதுமக்களை வண்டுகள் விரட்டி விரட்டி கொட்டியதால் அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை அருகே மெஞ்ஞானபுரம் கடாகட்சபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் முதலூரில் உள்ள புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். இந்நிலையில் மாலையில் வழக்கம் போல் பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகளும், விவசாய வேலைக்கு சென்று விட்டு வருவோரும், பொதுமக்களும் அன்றாட தேவை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கடாகட்சபுரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பனைமரத்தில் இருந்து பறந்து வந்த வண்டுகள் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்டின. இதனால் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஊர்மக்கள் தீப்பந்தத்துடன் வந்து வண்டுகளை விரட்டினர்.
வண்டுகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட பிளஸ்டூ மாணவர்கள் அகஸ்டின், ஜான் கென்னடி, அன்சி ஜேசி உள்பட 10 பேர் முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக ஜான் கென்னடி உள்பட 5 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வண்டு கூட்டை தீ வைத்து அழித்தனர்.












Click it and Unblock the Notifications