அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து பகவத் கீதையை அகற்றுங்கள்.. திருமாவளவன் வேண்டுகோள்
அப்துல் கலாம் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள பகவத் கீதையை அகற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி: அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து பகவத் கீதை அகற்ற வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார்.
அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை பக்கத்தில் இருப்பது போன்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் என்பவர் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் சாதி, மத, இன, மொழி என அனைத்திற்கும் அப்பாற்பட்டவர், பகவத்கீதை வைக்கப்பட்டது தவறு என்றும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று புதுச்சேரி சென்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்தவர் அப்துல் கலாம் என்றும், அவரது நினைவிடத்தில் இருந்து பகவத் கீதையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.