பிக் பாஸ் வீட்டு புரணிகள்.... கண் கலங்கிய இல்லத்தரசிகள் இப்போ கலகலப்பா மாறிட்டாங்களோ?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்தோடு பலரும் பார்ப்பதால் சீரியல்கள் டல்லடிக்க ஆரம்பித்து விட்டன.
சென்னை: கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் நட்சத்திரங்கள் பேசும் ஊர் புரணி, உலக புரணிகளை கேட்க ஆவலாக இருப்பதால் டிவி சீரியல் இப்போது டல்லடிக்க ஆரம்பித்து விட்டன.
சரிந்து கிடக்கும் டிஆர்பியை காப்பாற்ற யார் யாரையே கொலை செய்கின்றனர். குழந்தைகளை கடத்துகின்றனர். ஆனாலும் அதை பார்க்க யாரும் விரும்புவதில்லை. காரணம் 100 நாட்கள் கழித்து பார்த்தாலும் சீரியல்கள் புரியும் என்பதால் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.
குழந்தைகள் கடத்தல்
தமிழ் தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை சீரியல்கள் ஆக்கிமிரத்துக்கொண்டுள்ளன. காலையில் டிபன் செய்து குழந்தைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் பேக் செய்து அனுப்பி விட்டு சீரியல் பார்க்க அமர்ந்து விடுகின்றனர்.
கதைகள் பலவிதம்
லட்சுமி வந்தாச்சு, தலையணை மந்திரம், யமுனா, அபூர்வ ராகங்கள், தாமரை என வித விதமான பெயர்களில் சீரியர்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றை கண்ணீர் சிந்திக்கொண்டே பார்த்து ரசிக்கின்றன. காய்கறி வெட்டும் போது இல்லத்தரசிகள் விடும் கண்ணீரில் காய்கறிகளில் உப்பு அதிகமாகிவிடும் என்பதே உண்மை.
பிக் பாஸ்
கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்தான் மக்களின் பொழுது போக்காக மாறி வருகிறது. 100 நாட்கள் ஒரு வீட்டில் பிரபலங்கள் தங்க வேண்டும். இதுவரை 22 நாட்கள் கடந்து விட்டது. பலர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
ஓயாத புரணிகள்
கிராமங்களில்தான் பெண்கள் ஒன்றாக கூடி யாரைப்பற்றியாவது எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். அது சில சுவாரஸ்யமாகவே இருக்கும். அலுவலகங்களில் பல ஆண்கள் ஒன்றாக கூட பெண்களைப் பற்றி புரணி பேசுவார்கள், அது அவர்களுக்கு பொழுது போக்கு. பிக் பாஸ் வீட்டிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
நெகடிவ் பாசிடிவ்
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பலரும் நெகடிவ் ஆக பேசப்பேச அதுவே பாசிட்டிவ் ஆக மாறி வருகிறது. பலரும் இரவு 9 மணிக்கு மேல் விஜய் டிவி பக்கம் சேனலை மாற்றி வருகின்றனர். குடும்பத்தோடு பிக்பாஸ் பார்ப்பதால் அதன் டிஆர்பி எகிறி வருகிறது.
சீரியல்கள் டல்
இரவு 9 மணிக்கு பிரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியல்கள் பலவும் டல்லடிக்கின்றன. தமிழ் சீரியல்கள் ரசிகர்களை கவரவும், விறுவிறுப்பை கூட்டவும் குழந்தை கடத்தல், கொலை, கர்ப்பிணிகளுக்கு விஷம் வைப்பது, என பல கொடூர சீன்களை வைத்து டிஆர்பியை ஏற்ற முயற்சி செய்கின்றனர்.
வார விடுமுறை நாட்கள்
வாரத்தின் 7 நாட்களும் பிக் பாஸ் காய்ச்சல்தான் பலருக்கும் பீடித்துக்கொண்டிருக்கிறது. திங்கள் முதல் ஞாயிறு வரை விடாமல் பிக் பாஸ் பார்க்கின்றனர். டிவியில் பார்க்க மிஸ் செய்தவர்கள் தங்களின் மொபைல் ஆப்ஸ் மூலம் பார்க்கின்றனர். சனி, ஞாயிறுகளில் சொந்தக்காரர்களின் வீட்டிற்குப் போனாலும் பிக் பாஸ் பேச்சுதான். அங்கே போய் கூடி கூடி பிக் பாஸ் பார்க்கின்றனர்.
கண்ணீர் மறைந்து கலகலப்பு
பக்கத்து வீட்டினை எட்டிப்பார்ப்பது பலருக்கும் பிடித்தமான விசயம். பிக் பாஸ் போன்ற பிரம்மாண்ட வீட்டில் பிரபலங்கள் ஆடுவது, பாடுவது, புரணி பேசுவதை கேட்கவும், பார்க்கவும் யாருக்குத்தான் பிடிக்காது எனவே பெண்கள், ஆண்கள் என்று பலரும் ஆர்வத்துடன் இதனை பார்க்கின்றனர் என்கின்றனர்.
சமூக வலைத்தள விளாசல்கள்
ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்பில் பிக் பஸ் பற்றிய பதிவுகள்தான் அதிகம் காணப்படுகின்றன. கழுவி கழுவி ஊற்றினாலும் அதற்காகவே பலரும் பார்க்கின்றனர். நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி பற்றி பலரும் பேசி தீர்க்கின்றனர்.
100 நாட்கள் தாக்கு பிடிப்பது யார்
ஸ்ரீ முதல் ஆர்த்தி வரை பலரும் வெளியேறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடித்து பணத்தையும், பட்டத்தையும் வெல்லப்போவது யார் என்பதுதான் இப்போது பலரது கேள்வி. இதில் பலரும் ஓவியாவிற்கு ஓட்டு போட்டு காப்பாற்றியுள்ளனர். யார்தான் வெல்கிறார்கள் என்று பார்க்கலாம்.