மைனர் சிறுவர்களின் பைக் ரேஸால் விபரீதம்.. தாயை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகள்!
சென்னையில் பைக் ரேஸ் செய்து பெண் ஒருவரின் உயிரைப் பறித்தவர்கள் மைனர் சிறுவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சென்னை : சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற பைக் ரேஸின் போது பலியான பெண்ணுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் இருப்பதாக தெரிய வந்தள்ளது.
சென்னையில் கடற்கரை சாலைகளில் வார விடுமுறைகளின் போது பைக் ரேஸ் நடப்பது என்பது தொடர் கதையான விஷயமாக உள்ளது. இந்த மாதிரியான பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பைக் ரேஸ் நடத்தக் கூடாது என்று போலீசார் பல முறை எச்சரிக்கை விடுத்தும், இவற்றையெல்லாம் மீறி இளைஞர்கள் ரேஸில் ஈடுபடுகின்றனர். இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 பேர் 6 பைக்குகளில் பைக் ரேஸ் செய்துள்ளனர்.
இது தான் பொழுதுபோக்கா?
அடையாறு மேம்பாலத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலை வழியாக பாரிமுனை செல்வதற்காக 3 மோட்டார் சைக்கிள்கள் போட்டி போட்டு சென்றுள்ளன. அப்போது ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனை அருகே சாலையை கடப்பதற்காக இரண்டு பெண்கள் காத்திருந்தனர்.
தூக்கி வீசப்பட்ட பெண்
ரேஸ் செய்து வந்த அதிவேக மோட்டார் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மீனா, யசோதா என்ற இரண்டு பெண்கள் மீது மோதியது. இதில் மீனா 15 அடி தூக்கி வீசப்பட்டார்.
உயிரிழப்பு
வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மீனா படுகாயங்களுடனும் யசோதா கால் முறிந்த நிலையிலும் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தவிக்கும் பிள்ளைகள்
இதில் சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட துயர சம்பவத்தால் மீனாவின் 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் பிள்ளைகள் தாயின்றி தவிக்கின்றன. மீனாவின் கணவர் பாலகிருஷ்ணன் செக்யூரிட்டி பணியாற்றி வருகிறார், அவர் மனைவி உயிரிழந்ததால் அதிர்ச்சியில் உள்ளார்.
மைனர் ரைடர்ஸ்
பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பைக் ஓட்டி வந்தவர்கள் 16 வயது மைனர் சிறுவர்கள் என்று தெரிய வந்ததுள்ளது.
3 பிரிவில் வழக்கு
கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலைக்கு காரணமாக இருத்தல், வேகமாக பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் சிறுவர்கள் என்பதால் அவர்களை அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பலர் வாழ்க்கைக்கு உலை
வேண்டாத பைக் ரேஸ் மோகத்தால் 2 மைனர் இளைஞர்களின் வாழ்க்கை இருண்டுள்ளது. இதோ நின்று விடாமல் மீனாவின் பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதோடு, யசோதாவின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக்கியுள்ளது. பலரின் வாழ்விற்கு எமனாக வரும் இந்த பைக் ரேஸ் தேவைதானா? என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.