தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என 71% பேர் கருத்து- இந்தியா டுடே சர்வே
தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்கிறது இந்தியா டுடே சர்வே.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் காலூன்றவே முடியாது என 71% பேர் கருத்து தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலூன்றுவதற்கு பாஜக படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை கைப்பற்றி அதன் மூலம் காலூன்றவும் பாஜக முயற்சிக்கிறது.
ஆர்கே நகர் ரிசல்ட்
ஆனால் அதிமுக- பாஜகவுக்கு எதிரான மிகப் பெரிய அலை தமிழகத்தில் இருக்கிறது. இதன் முதல் கட்ட ரிசல்ட்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவு எனலாம்.
தினகரன் சபதம்
பாஜகவின் தொடர்ச்சியான தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டினால் மக்கள் அதனை நிராகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் தாம் அரசியலில் இருக்கும் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என தினகரனால் அடித்து சொல்ல முடிகிறது.
திமுக ஆட்சி அமைக்கும்
இந்நிலையில் தமிழகத்தில் 77 சட்டசபை தொகுதிகளில் 4578 பேரிடம் இந்தியா டுடே- கார்வி நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியது. இதில் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடத்தை நிரப்ப முடியாது
ரஜினிகாந்த் கட்சியால் 33 இடங்களைக் கைப்பற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினியால் தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப முடியாது எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
71% பேர் பாஜகவுக்கு எதிர்ப்பு
அதேபோல் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியுமா என்கிற கேள்விக்கு முடியாது என 71% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக காலூன்ற முடியும் என 15% பேரும் எந்த கருத்தும் இல்லை என 14% பேரும் கூறியுள்ளனர்.