காவிரி பிரச்சனை உணர்வுபூர்வமானது என்றால் .. தமிழக பாஜக தலைவர்களின் வாயை கட்டிப் போடாதது ஏன்?
சென்னை: காவிரி பிரச்சனையை உணர்வுபூர்வமானது என்று கூறும் மத்திய அரசு தமிழக பாஜக தலைவர்கள் சிலரின் அடிமுட்டாள் தனமான பேச்சுகளுக்கு தடை போடாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை குப்பையில் தூக்கிப்போட்ட மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாதம் அவகாசம் கோரியும் இன்று உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தது.
காவிரி விவகாரம் 4 மாநிலங்கள் சார்ந்த உணர்வுபூர்வமான பிரச்சனை என கூறி வருகிறது மத்திய அரசு. அப்படி காவிரி பிரச்சனை உணர்வு பூர்வமானது என்றால் தமிழக பாஜக தலைவர்கள் சிலர் அடி முட்டாள்தனமாக பேசி வருவதை கட்சி மேலிடம் ஏன் கண்டும் காணாமலும் உள்ளது.
படுமோசம்
குறிப்பாக எச் ராஜா பேச்சு ரொம்ப மோசமாக இருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக வென்றால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் என்று அவர் பேசுவது தமிழக மக்களை இழிவுபடுத்தும் செயல். தமிழக விவசாயிகளை துச்சமாக மதிக்கும் செயல்.
மதிக்கவில்லை
எச் ராஜாவின் இந்த பேச்சு தமிழகத்தின் உரிமையை அசிங்கப்படுத்தும் செயல். எச் ராஜா தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் பாஜக தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருப்பதையே இது காட்டுகிறது.
மிரட்டுகிறார்
ஒருவேளை காங்கிரஸ் அங்கு ஜெயித்தால் உங்களுக்கு மத்திய அரசு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காது என்று மறைமுகமாக மிரட்டுவது போல் உள்ளது எச் ராஜாவின் பேச்சு. தமிழக பாஜக தலைவரான தமிழிசையும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்குள் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என கூறுகிறார்.
பாஜக தீவிரம்
தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பாஜக ஆட்சியில் இருந்தால் இப்பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் தமிழிசை. அப்படியானால் இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதிலும் ஆட்சியில் அமர்ந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் என்பதில் பாஜகவினர் தீவிரமாக உள்ளனர்.
விவசாயிகள் கொதிப்பு
தமிழக பாஜக நிர்வாகிகள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருக்கிறார்கள். இவர்களது பேச்சுகளால் தமிழகத்தில் விவசாயிகள் உள்பட அனைவருமே கொதிப்படைகிறார்கள்.
வேடிக்கை பார்ப்பது ஏன்?
இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை தடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நிர்வாகிகளின் பேச்சை கண்டிக்காமல், அவர்களின் பேச்சுக்கு தடை போடாமல் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பாஜக தலைமை வேடிக்கை பார்ப்பது ஏன்?