சுவாதி கொலை சம்பவத்தில் 'அமைப்புகளுக்கு' தொடர்பா? கொளுத்தி போடும் ஹெச்.ராஜா
சென்னை: சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏதேனும் அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாக என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் தெரிவித்தார்.
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில், குற்றவாளியை மத ரீதியாக தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து கூறி வரும் நிலையில், ராஜாவின் கருத்து அதற்கு நெய் ஊற்றுவதை போல உள்ளது.
நிருபர்களிடம் ஹெச். ராஜா கூறியதாவது: சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் இனஜினீயர் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தனி நபர் விரோதமாக நடந்ததா? அல்லது இதற்கு பின்னால் அமைப்பு ஏதேனும் இருக்கிறதா? என்று தெரியவில்லை.

கண்காணிப்பு
கடந்த 2 மாதமாகவே சுவாதியை பின் தொடர்ந்து ஒருவர் மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. அதே போல் சுவாதி வீட்டை சுற்றி மர்ம நபர்கள் கண்காணித்து வந்ததாக செய்தி வந்துள்ளது. எனவே போலீசார் நேர்மையான முறையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

தானே விசாரிக்க வேண்டும்
இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்ல வேண்டுமானால் ஹைகோர்ட்டு இந்த வழக்கை தாங்களே முன் வந்து எடுத்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சொன்னது மட்டும் போதாது. சுவாதி வழக்கை நேரடியாக ஐகோர்ட்டு எடுத்துக் கொண்டு ஒரு சிறப்பு விசாரணை குழு மூலமாக வரையறைக்கு உட்பட்ட நாட்களுக்குள் விசாரித்து சுவாதி குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.

மவுனம் ஏன்
சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பி அவர்களது குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா, சுவாதியின் கொலை வழக்கில் மவுனம் காப்பது ஏன்?

நிவாரணம்
சுவாதி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காதது துரதிருஷ்டவசமானது. இதற்கு காரணம் என்ன என்று புரியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications