ராஜ்யசபா சீட் ப்ளஸ் அமைச்சர் பதவி... விஜய்காந்த்துடன் பா.ஜ.க. 'விடாது கருப்பு' பேரம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் மண்ணை கவ்வியபோதும் 'கவுரவமான' கூட்டணி அமைத்து தலைநிமிர்ந்து நடந்த பா.ஜ.க. இப்போது 'கூட்டணி' சேர கட்சிகளே கிடைக்காமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் தேமுதிகவை எப்படியும் கூட்டணிக்கு கொண்டுவர இருக்கிற அத்தனை "பேர"வாய்ப்புகளையும் முழு வீச்சில் பயன்படுத்திப் பார்க்கிறது பா.ஜ.க. ஆனால் 'யதார்த்தங்களை' உணர்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தோ அந்த கட்சிக்கு பதில் தராமல் இழுத்தடித்து வருகிறார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கான செல்வாக்கு என்பது மிக அதிகமாக 2%தான்.. இத்தனைக்கும் நாடு முழுவதும் 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது மோடி அலை வீசியது... ஆனால் தமிழகத்தில் "ஓ! அப்படியா!" என்கிற அளவுக்குத்தான் அந்த மோடி அலை இருந்தது!
ஆனால் இந்த 2% வாக்கு விகிதம் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்ள பாஜகவுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. கூடவே ஒரு கட்சி இருந்தால் கூட்டத்தில் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்று தங்களது உண்மையான பலம் வெளியில் தெரிந்து விடாமல் மறைக்க அது உதவும்.இந்த பயணத்தில் எப்படியும் தேமுதிகவை வளைத்துப் போட்டுவிடுவது என்பதற்காக அந்த கட்சி படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல...
மோசம் போக தயாரில்லை
அதுவும் 'எந்த கூட்டணியிலும் நான் இல்லைங்க' 'நாங்க கூட்டணியில் இருப்பதாக சொல்றவங்க சொல்லிகிட்டே இருக்கட்டும்' என்று முகத்தில் அறைந்தது போல விஜயகாந்த் பேட்டி கொடுத்த பின்னரும் கூட அவரது வீட்டுக்கு காலை, மாலை, இரவு என படையெடுத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில் பா.ஜ.க.வை நம்பி இனியும் மோசம் போக நாங்க தயாரில்லை என்பதுதான் நிலைப்பாடு.
அன்றைய பேரம்
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருந்தது தேமுதிக. எப்படியும் அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்; அமைச்சர் பதவி அல்லது மத்திய அரசு பதவி கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. டெல்லியிலும் விஜயகாந்த்துக்கு தொடக்கத்தில் இதை நிரூபிக்கும் வகையிலான மரியாதைகளும் கிடைத்தன.
ஏமாந்த கேப்டன்
ஆனால் ஆட்சிக் கட்டிலில் ஸ்டிராங்காக உட்கார்ந்த பின்னர் பாரதிய ஜனதா கட்சி, தேமுதிகவை சீண்டவே இல்லை. தேமுதிகவின் கனவுகளும் காத்திருப்புகளும் நீடித்ததே தவிர நிறைவேறவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தனியாகவே செயல்பட தொடங்கிவிட்டார் விஜயகாந்த். அப்போது அவர் சொன்னதுதான், நான் எந்த கூட்டணியிலும் இல்லை என்பது.
படையெடுப்பு
ஆனால் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை என்று பா.ஜ.க தொடர்ந்து, தேமுதிக எங்க கூட்டணியில்தான் இருக்கிறது என ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாமல்தான், நாங்க கூட்டணியில் இருக்கிறோம் என சொல்கிறவர்கள் சொல்லிக் கொள்ளட்டும் என்றும் கூறியும் பார்த்தார் விஜயகாந்த். ஆனாலும் பா.ஜ.க. அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதாக இல்லை என நேரடியாக விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் படையெடுக்கத் தொடங்கியது.
அசராத விஜயகாந்த்
இந்த கஜினி ஸ்டைல் படையெடுப்புகளால் அசந்து போகாத விஜய்காந்த் அவர்களுக்கு எந்த பதிலும் தரவில்லை. ஆனாலும் டெல்லியில் இருந்து பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவை களமிறக்கி விஜயகாந்த் வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது பா.ஜ.க.
மீண்டும் பழைய அஸ்திரம்
அப்போது பழைய அஸ்திரமான, ஒரு ராஜ்யசபா சீட்; அமைச்சர் பதவி தருகிறோம், எங்களுடன் சட்டசபை தேர்தலுக்கும் கூட்டணி அமையுங்கள் என கூப்பிட்டுப் பார்த்தனர் பாஜக தலைவர்கள்... ஆனால் விஜயகாந்த்தோ, நீங்க ஜெயலலிதாவை புகழ்ந்து கொண்டே எங்கிட்ட கூட்டணி பேசினா எப்படி சரியா வரும்? உங்களுக்கு அவங்க ஆதரவு தேவை... எங்களுக்கு அப்படி எதுவும் இல்லையே? அந்த ஆட்சியை அகற்றனும் என்பதுதான் எங்களோடு இலக்கு... இதுல எப்படி நாம கூட்டணி அமைக்க முடியும்? என காட்டமாக கேட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
உதார்விடலாமே
பா.ஜ.கவைப் பொறுத்தவரை விஜயகாந்த், தங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை முதல்வர் வேட்பாளராக்கி நாங்களும் தேர்தல் களத்தில் 'பந்தாவாக' நிற்கிறோம் என்று உதார் விடுவதற்கு மட்டுமே உதவும். இதை தெளிவாக உணர்ந்துதான் விஜயகாந்த், சட்டசபை தேர்தலில் "ஆதாயம்" தரும் கூட்டணி பக்கம் போவதுதான் சரியானது என்கிற நிலைப்பாட்டில் 'இறுக்கமாக' இருக்கிறார்...
இருப்பினும் விடாது கருப்பாக துரத்திக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க.!