லோக்சபா தேர்தல்: திமுகவுடன்- பாஜக ரகசிய பேச்சுவார்த்தையா?-மதிமுக சந்தேகம்

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை சென்னை வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகாததால் நாளைய மோடி கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளமாட்டார் என்று மதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியை நீண்டகாலமாக ஆதரிக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தருக்கு சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி, திமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே வைகோ நாளைய மோடி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக மதிமுக, புதிய நீதிக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை மட்டுமே இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கின் புதிய தொலைபேசி உரையாடல் விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இல. கணேசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சி கனிமொழிக்கு எதிராக 2ஜி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு. நமக்கு கவலையில்லை
ஆனால் ஷீலா தீக்சித் ஊழலை பேசி ஆட்சிக்கு வந்த ஆ ஆ (ஆம் ஆத்மி) அவர் குறித்து ஆதரங்களை வெளியிடாமல் இதை பேசுவானேன்? ஒருவர் பேசும் பேச்சை அவர் அறியாமல் ஒட்டு கேட்பதும் பதிவு செய்வதும் எந்த வகை நியாயம்? இவ்வாறு பட்டும்படாமல் திமுகவை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
இல. கணேசனின் இந்த பதிவும் திமுகவுடன் பாரதிய ஜனதா ரகசிய பேச்சுவார்த்தைகளை உறுதி செய்வது போலவே இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications