இன்னும் யார் முதுகிலாவது ஓசி சவாரி செய்ய துடிக்கும் பாஜக!
ரஜினியை மறைமுகமாக கூட்டணி அழைப்பதன் மூலம் பாஜக யாருடைய முதுகிலாவது சவாரி செய்ய துடிக்கிறது.
சென்னை: ரஜினி லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்று கூறுவதிலிருந்து அக்கட்சி யார் முதுகிலாவது சவாரி செய்ய நினைப்பதை இன்னும் விடவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அனைத்திலும் ஊழல், நாட்டை கொள்ளையடிக்கும் நிலைதான் உள்ளது. பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை.
எனக்கு தேவையானதை என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்கள் அளித்துவிட்டனர். எனவே மக்களுக்கு நல்லது செய்யவே வருகிறேன் என்றார்.
தமிழிசை வாழ்த்து
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், இப்போதைய அரசியல் சூழலில் சமீப காலமாக ஆர்கே நகர் போன்ற தேர்தல்களை பார்க்கும் போது தமிழகத்தில் ஊழலை எதிர்த்து போட்டியிட பல கரங்கள் தேவைப்படுகிறது. பலம் இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது. ஊழலற்ற நிர்வாகத்தை வரவேற்கும் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
2019-இல் நாடாளுமன்றத் தேர்தலில்...
ரஜினி அரசியலால் யாருக்கும் பின்னடைவு இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்கிறேன் என்று ரஜினி சொன்னால் அவர் நிச்சயம் மோடியால் தான் தர முடியும். இதனால் அவர் பாஜகவுடன் தான் சேர்வார் என்பது என்னுடைய கணிப்பு என்றார் தமிழிசை.
ரஜினியின் அண்ணன் உறுதி
ரஜினி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார். அதேபோல் அவரது நண்பர் ராஜ்பகதூரும் எந்த கட்சியுடனும் ரஜினி கூட்டணி வைக்க மாட்டார் என்றுதான் கூறினார். இத்தகைய சூழலில் இப்போதே துண்டு போட்டு வைப்பது போல் தமிழிசை கூறுவது எந்த விதத்தில் நாகரீகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கேட்கின்றனர்.
கங்கை அமரனுக்கு ஆதரவு
ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட போது தங்கள் கட்சி வேட்பாளர் கங்கை அமரனுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார் என்று ஒரு பிட்டை போட்டார். ஆனால் அதை ரஜினி தரப்பு மறுத்தது. இதை மறந்துவிட்டு ரஜினி கூட்டணி அமைப்பார் என்று தமிழிசை கூறுவதை என்னவென்று சொல்வது. வட மாநிலங்களில் அமோகமாக வெற்றி பெறும் பாஜகவை தமிழகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை காட்டிலும் பாஜக குறைந்த வாக்குகள் பெற்றது வெளிப்படுத்துகிறது. இதனால் யார் முதுகிலாவது அமர்ந்து ஓசியிலேயே சவாரி செய்யவே பாஜக விரும்புகிறது. ரஜினியின் அரசியலால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கூறிவிட்டு கூட்டணிக்கு அடிபோடுவதுதான் தேசிய கட்சிக்கு அழகா?.