கழகங்களே இல்லாத தமிழகத்தை விரும்பும் பாஜக.. ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவை நிராகரிக்குமா?
கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என முழங்குகிற பாஜகவால் அந்த கட்சிகளின் வாக்குகளே வேண்டாம் என அறிவிக்க திராணி இருக்கிறதா? என்பது அரசியல் பார்வையாளர்கள் கேள்வி.
சென்னை: கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற கோஷத்தை முன்வைக்கும் பாஜக, ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சிகளின் ஆதரவே வேண்டாம் என ஏன் சொல்ல தயங்குகிறது என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் வலிமையான ஆளுமைகள் அரசியல் இல்லாத நிலையில் திடீரென 'கழகங்கள் இல்லாத தமிழகம்' என்கிற கோஷத்தை பாஜகவும் இந்துத்துவா அமைப்புகளும் முன்வைத்து வருகின்றன. அதேநேரத்தில் கழகங்களை சிதைத்து அதன் வாக்கு வங்கி மீது சவாரி செய்யவும் துடியாய் துடிக்கிறது பாஜக.

அதிமுக அணிகள்
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பல அணிகளாக சிதைந்துவிட்டது. இந்த அணிகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வருகிறது டெல்லி.

எடப்பாடி கோஷ்டி ஆதரவு
தற்போது ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எடப்பாடி கோஷ்டி ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஓபிஎஸ் கோஷ்டியும் தங்களது ஆதரவை இன்று அறிவிக்க இருக்கிறது.

டெல்லி போகும் எடப்பாடி
ஆதரவை அறிவித்த கையோடு டெல்லிக்கு சென்று ராம்நாத் கோவிந்தின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான இல. கணேசன், திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிவிக்க திராணி உள்ளதா?
கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற கோஷத்தை ஒருபுறம் வைத்துக் கொண்டே கழகங்களின் வாக்குகளுக்காக இலவு காத்து கிடக்கிறது பாஜக. தமிழகத்தில் கொல்லைப்புற வழியாக காலூன்ற நினைக்கும் பாஜகவால் கழகங்களின் வாக்குகளே தேவை இல்லை என்கிற அறிவிப்பை வெளியிடும் திராணி இல்லாமல்தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications