லோக்சபா தேர்தலில் பா.ஜ.வுக்கு வெற்றி உறுதி: எஸ்.வி.சேகர்
சங்கரன்கோவில்: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
சங்கரன்கோவிலை அடுத்த புளியங்குடியில் நீதியின் குரல்அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நடந்த முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றிபெறும். பாஜக மதவாத கட்சியல்ல. ஒழுக்கம், ஆன்மிகம், தேசியம் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் எல்லா மக்களுக்கும் பாகுபாடு இல்லாத ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள முஸ்லிம்களும் பா.ஜ.க வை ஆதரிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் மோடியை மதவாதியாக சித்தரிக்கின்றனர். அது உண்மையில்லை. அந்த மாநிலத்தில் மின்வெட்டும் இல்லை.
இந்தியாவில் வாழும் மக்களில் உள்ள வாக்காளர்களில் 70 சதவீதம் பேர் எந்த கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் மோடியை ஆதரிக்கின்றனர்.
அதனால் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிறது. அவ்வாறு வெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமராகும் பட்சத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழும்.
மேலும் எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. காஞ்சி சங்கராச்சாரியார்களுக்கு நிரபராதிகள் என கிடைத்த தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நீதியின் குரல் அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் உடனிருந்தார். முன்னதாக அவர் சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆலயத்திற்கு சென்றார்.