கடல் சீற்றம் எதிரொலி.. கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை ரத்து
கடலில் சீற்றம் அதிகமாக உள்ளதால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டு களிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்காகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடல் நீர் மட்டம் குறைவு, சூறைக் காற்று என்று பல்வேறு காரணங்களைக் காட்டி அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலான நாட்களில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.
கடல் நடுவே திறந்தவெளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே உப்பு காற்று பட்டுச் சிலை சேதம் அடைவதைத் தவிர்க்கும் வகையில் 3 வருடத்துக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசிப் பராமரிக்கப்பட்டு வருகிறது. ரசாயன கலவை பூசி 3 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், சிலை சேதமடைவதை தவிர்க்கும் வகையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி தொடங்கியது. பராமரிப்பு பணிகள் தொடங்கி 4 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப் பணிகள் நிபுணர்கள் மேற்பார்வையில் நடந்து வருகிறது. சிலையின் மேல் காகித கூழ் ஒட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கடல் சீற்றம் மற்றும் மழைக் காரணமாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 நாட்களாகத் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.