குமரியில் கனமழை: திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தம் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பலத்த மழை காரணமாக, திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை அதிகாலை தொடங்கி, விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது.
திடீரென மீண்டும் மழை பெய்ததால் முற்பகல் 11.30 மணிக்கு படகுப் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஓரளவுக்கு மழை குறைந்ததால் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன.
திருவள்ளுவர் சிலை: திருவள்ளுவர் பாறை அமைந்துள்ள பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் அங்கு ஆக்ரோஷத்துடன் அலைகள் எழுந்தன. இதனால், அங்கு நாள்முழுக்க படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பயணிகள் ஏமாற்றம்: படகுப் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம், பேரூராட்சிப் பூங்கா உள்ளிட்டப் பகுதிகளில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்குக் காணப்பட்டது. பொதுவாக விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும் கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.