கோயம்பேடு மார்க்கெட்டில் வெடிகுண்டு புரளி.. 2 நேரம் தீவிர சோதனை
கோயம்பேடு மார்க்கெட்டில் வெடிகுண்டு இருப்பதாக யாரோ புரளியை கிளப்பிவிட்டனர். இதனால் 2 மணி நேரம் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரோ இணைய தளத்தின் மூலம் புரளியை கிளப்பி விட்டனர்.
இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் துணை ஆய்வாளர் விஜய் மோகன் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதனையும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த தேடுதல் வேட்டையில் மோப்ப நாயை, வெடிகுண்டு நிபுணர்கள் பயன்படுத்தினார்கள். அதிகாலை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதனையடுத்து, கோயம்பேட்டில் வெடிகுண்டு இருப்பதாக இணையதளத்தில் வந்த செய்தி புரளி என்பது தெரிய வந்தது. பின்னர், வெடிகுண்டு பொருட்கள் எங்கும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.
தொடர்ந்து, யார் இந்த புரளியை இணையதளத்தின் மூலம் பரப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.