நீட் வாபஸாகும் வரை... தமிழக ரயில் நிலையங்களில் குண்டுவெடிக்கும்... மர்ம கடிதத்தால் பரபரப்பு
நீட் தேர்வை திரும்ப பெறும் வரை தமிழக ரயில் நிலையங்களில் மாதந்தோறும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படும் என்று சென்னை ரயில் நிலைய அதிகாரிக்கு மர்ம கடிதம் வந்துள்ளது.
சென்னை: நீட் தேர்வை திரும்ப பெறும் வரை தமிழக ரயில் நிலையங்களில் மாதந்தோறும் குண்டு வெடிக்கும் என்ற கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு தகர்ந்து விடும் என்பதால் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதை பொருட்படுத்தவில்லை.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்ற கருத்து வலுத்ததை அடுத்து சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரி அவசர சட்டத்தை தாக்கல் செய்தால் அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு மாணவர்கள் எதிர்ப்பு
இதைத் தொடர்ந்து தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இதனிடையே நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரியலூர் அனிதா
பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவி நீட் தேர்வால் தனது மருத்துவ படிப்பு தகர்ந்துவிடும் என்று உச்சநீதிமன்றத்தில் நீட் ஆதரவு மாணவர்கள் தொடுத்த வழக்கில் எதிர்மனு தாராக இணைத்து கொண்டார். எனினும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனிதா தற்கொலை
இந்நிலையில் மருத்துவ கனவு கலைக்கப்பட்டதால் மனமுடைந்த அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி இன்று தமிழகம் முழுவதும் 5-ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மர்ம கடிதம்
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாதந்தோறும் தமிழக ரயில் நிலையங்களில் குண்டுவெடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அந்த கடிதத்தில் வேறு தகவல்கள் ஏதும் இல்லை. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications