தீபாவளி போனஸ் ... ஒருபுறம் மகிழ்ச்சி... மறுபக்கம் சோகம் - டாஸ்மாக்ல செலவழிக்காதீங்க
சென்னை: தீபாவளி பண்டிகை கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. ஆள் ஆளுக்கு தீபாவளி வந்ததாச்சா என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். புத்தாடையும், பட்டாசும் வாங்கிவிட்டாலே தீபாவளி
வந்துவிட்டதாகத்தான் அர்த்தம். ஆனால் போனஸ் வந்தால்தான் தொழிலாளர்களுக்கு தீபாவளி வந்ததாக அர்த்தம். அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் அறிவிக்கப்பட்டு விட்டது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது.
பஞ்சாலை தொழிலாளர்கள், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போனஸ் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி நெருங்கினாலே, இல்லத்தரசிகள் பல கோரிக்கைகளை முன்வைப்பார்கள். அதற்கெல்லாம், போனஸ் வரட்டும் வாங்கித்தருகிறேன் என்று கூறி சமாளிப்பார்கள். இதோ தீபாவளி வந்துவிட்டது.
போனஸ் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அறிவிப்பு சிலருக்கு சந்தோசத்தையும், சிலருக்கு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல போனஸ் பணத்தை டாஸ்மாக்கில் கொண்டு போய் கொட்டாதீர்கள் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
10 சதவிகித போனஸ்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தொழிலாளர்கள்
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும் என்றும், பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
வீட்டுவசதி, குடிநீர் வாரிய தொழிலளர்கள்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணைத்தொகை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பயதத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
20 சதவிகித போனஸ்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கும், தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ‘சி' மற்றும் ‘டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்
தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 தொழிலாளர்களுக்கு 242 கோடியே 41 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்பட உள்ளது.ஆனால் இந்த போனஸ் அறிவிப்பு ஒருசிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தேயிலை தொழிலாளர்கள்
வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே தீபாவளிப் பண்டிகைக்காக வழங்கப்பட்ட போனஸ் பணத்தை தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்க செலவழிக்கக் கூடாது என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு போனஸ்
திருப்பூரில் பணிபுரியும் பனியன் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் போனஸ் வழங்கப்பட்டு விடும். இந்த பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளில் அதிகமாக செலவிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் செலவு
கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவும், ஸ்ரீபுரம் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் ஜவுளி தொழிலாளர்களிடம் இந்த ஆண்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆக்கப்பூர்வமான செலவு
தீபாவளிப் பண்டிகைக்காக வழங்கப்பட்ட போனஸ் பணத்தை தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி செலவழிக்கக் கூடாது எனவும், பட்டாசுக்கும் செலவழிக்காமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். கேட்பார்களா தொழிலாளர்கள்... அப்புறம் டாஸ்மாக் விற்பனையாளர்களின் டார்கெட் என்னாவது என்பது சிலரது கேள்வியாக உள்ளது.