சென்னைக்கு விரையும் பாடப்புத்தகங்கள்- பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கை கொடுக்கும் மாணவர்கள்
நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடபுத்தகங்கள் நெல்லையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியில் மாணவர்களும் கை கோர்த்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வெளுத்து வாங்கி விட்டதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் பாட புத்தக்கங்களும் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்து விட்டதால் பள்ளிகளை சீரமைத்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் 14 ஆம்தேதி முதல் இந்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பாடப்புத்தங்களை இழந்த மாணவர்களுக்கு புது பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. பிற மாவட்டங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நோட்டுகள் பாடபுத்தகங்களை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களில் மீதமிருந்த 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்கள் மற்றும் தொடக்க கல்வி துறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் லாரிகளில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் இந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் தங்களிடம் இருக்கும் மீதமுள்ள கூடுதல் பாடப்புத்தகங்களை சக மாணவர்களுக்கு சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் பழைய பாடப்புத்தகங்கள் இருந்தால் சேகரித்து அவற்றையும் படிப்பதற்காக சேகரித்து அனுப்பும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications