தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் தமிழகத்தில்தான் அதிகமாம்... ஏன்? ஷாக் தகவல்கள்
தாய்ப்பால் கொடுக்காத பெண்கள் தமிழகத்தில்தான் அதிகம் என்றும் அதனால்தான் பச்சிளம் குழந்தைகள் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள் என்றும் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் தமிழகத்தில்தான் அதிகம் என்று தேசிய சுகாதார குழும திட்ட இயக்குநர் டாரிஸ் அகமத் கூறியுள்ளார். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் தமிழகத்தில் பெரும்பாலும் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மகப்பேறு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கடைப்பிடிக்கப்பட்டது. அதில் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் டாரிஸ் அகமத் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய டாரிஸ் அகமத், " தமிழ்நாட்டில் 100 சதவீத தாய்மார்களில் 45 சதவீதம் பேர் அறுவை சிகிச்சை மூலமாகக் குழந்தையை பெற்று எடுக்கிறார்கள்.
அப்படி அவர்கள் பெற்று எடுக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் இருந்து சாதாரண வார்டுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைக்குத் திரும்பியதும் தான் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க அனுமதிக்கிறார்கள்.
இதனால் தான் அந்தச் சதவீதம் உயரவில்லை. அறுவை சிகிச்சை மூலம் தான் கட்டாயம் குழந்தையை பெற்று எடுக்க முடியும் என்று இருந்தால் மட்டுமே தாய்மார்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும்" என்றார்.
பிறந்த குழந்தைக்கு தாயின் மூலம் கிடைக்கும் சீம்பால் கிடைக்காமல் போவதால், டெங்கு உள்ளிட்ட நோய்கள் எளிதாக அந்தக் குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தாய்ப்பால் வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட , உலக குழந்தைகள் நல நிதி நிறுவன தலைவர் ஜோப் சக்காரியா பேசும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் தாய்ப்பால் வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.
அப்படி நடத்தினாலும், கடந்த 10 ஆண்டுகளாகக் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் 55 சதவீதம் தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். இந்தச் சதவீதம் இதுவரை உயரவில்லை' என்று கவலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications