திருமண மஹால் அருகே பரிதாபம்... லாரியில் பைக் சிக்கி, உயிரோடு கருகிய புது மாப்பிள்ளை!
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நடந்த சாலை விபத்தில் இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை டூவீலருடன் எரிந்து பலியானார்.
திருப்புவனம் அருகே ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி மகன் மணிகண்டன்(27). கடந்த 2008ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்து கடந்த 2011ம் ஆண்டு முதன்முதலாக திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் போலீசாராக பொறுப்பேற்றார்.
இன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அவருக்கும் மதுரையைச் சேர்ந்த உறவினர் மகளுக்கும் லாடனேந்தலில் உள்ள வேலம்மாள் கல்யாண மகாலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக ஆலங்குளத்தில் இருந்து டூவீலரில் கல்யாண மகாலுக்கு மணிகண்டன் வந்துள்ளார்.

மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மகால் எதிரே திரும்பும் போது மதுரையில் இருந்து காய்கறி ஏற்றி கொண்டு பரமக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது நேருக்கு நேராக மோதினார். இதில் டூவீலர் லாரியில் மாட்டிக்கொண்டு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் மணிகண்டனும், டூவீலரும் முழுமையாக எரிந்தனர்.

விபத்தை பார்த்த உறவினர்கள் தீயை ஊற்றி அணைக்க முயலுவதற்குள் தீ மளமளவென பரவி பலியானார். திருமண மகால் அருகே நடந்த இந்த விபத்தால் உறவினர்கள் பெரும் சோகமடைந்தனர்.

விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் டூவீலருடன் புதுமாப்பிள்ளையும் முற்றிலுமாக கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications